தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் NIA சோதனை நடைபெற்று வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது.
சோதனையின் போது கடலூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமதுவை பிடித்து சென்றுள்ளனர். அதே போல் தேனி மாவட்டத்தில் பிஎஃப்-இன் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரை பிடித்து சென்றுள்ளனர்.
புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளும் உள்ளனர் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டல தலைவர் பக்கரி அகமது தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் சிஆர்பிஎப் வீரர்களும், 20க்கும் மேற்பட்டவர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
newstm.in