இன்று இறைச்சி கடைகளுக்கு தடை: நகராட்சி ஆணையர் அறிவிப்பு..!!
17 வருடங்களுக்கு பிறகு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் கடந்த டிச. 25ம் தேதி நடந்தது. இதனையடுத்து இன்று காலை 8.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று (ஜன.27) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு கோழி, ஆடு, மீன் மற்றும் மாடுகளை வதைசெய்வதும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்க்க, வதைசெய்ய அனுமதியில்லை. எனவே, பழநி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கோழி, ஆடு, மீன் மற்றும் மாடு இறைச்சிக்கடைகளை மூடும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பழநி நகராட்சியால் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடம் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த உத்தரவை மீறிசெயல்படுபவர்கள் மீது நகராட்சி மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்று மலைக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழநியில் ட்ரோன் காமிராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.