தற்போதைய கல்வி மந்திரி தான் அடுத்த நியூசிலாந்து பிரதமர்..?
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டன் (வயது 42). தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற ஜெசிந்தா, கொரோனா வைரஸ் தொற்று போன்ற நெருக்கடியான காலத்தில் நாட்டை சிறப்பாக வழி நடத்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ஜெசிந்தா, தனது ராஜினாமாவை அறிவித்து அதிரவைத்தார். வருகிற அக்டோபர் மாதம் நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அடுத்த மாதம் (பிப்ரவரி) பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதாக ஜெசிந்தா கூறினார்.
இந்த நிலையில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.
தலைவர் பதவிக்கான போட்டியில் ஜெசிந்தாவின் மந்திரி சபையில் காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவைத்துறையின் மந்திரியாக இருந்து வரும் கிறிஸ் ஹிப்கின்ஸ் (வயது 44) மட்டுமே களம் இறங்கி உள்ளார். இதனால் அவர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.