மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்..!

தமிழ்நாட்டில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் போல் மாதம் 2500 ரூபாய் கொடுப்போம் என பாஜக அறிவித்ததால் அண்மையில் நடைபெற்று முடிந்த சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியது.
ந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மாறியிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு என தமிழ்நாட்டில் ஒரு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அதுவும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது.
5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலங்களும், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலங்களும் வைத்திருக்கக்கூடாது. ஊராட்சி மன்ற தலைவர், நகர்மன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ மற்றும் எம்பி போன்ற மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களின் குடும்பங்களின் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழக்கப்படும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
இதுதவிர அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாநில அரசின் பிற ஓய்வூதிய பலன்களை பெறுபவர்களின் குடும்பங்களுக்கும், தொழில்வரி, வருமான வரி செலுத்துபவர்களின் குடும்பங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.
அதேநேரத்தில் தொழுநோய், ஹெச்ஐவி உள்ளிட்ட நோயாளிகள், முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு எந்த திட்டங்களில் நிதியுதவி பெற்றாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கும் இந்த திட்டத்தில் சிறப்புச் சலுகை இருக்கிறது.
இருப்பினும் இந்த திட்டத்தின் விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் இதுவரை எதிர்கொண்ட குறைபாடுகள், கோரிக்கைகள், தவறுகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து சில விதிமுறைகளை மாற்றம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இறந்தவர்களின் பெயரை நீக்குதல், புதிய பயனாளிகளை தேர்வு செய்தல், விண்ண நடைமுறை, ஆவணங்கள் சரிபார்ப்பு, விண்ணப்பதாரர் தகுதி நீக்கம் உள்ளிட்ட விஷயங்களில் புதிய மாற்றங்கள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு திட்டங்கள் செயலாக்கத்துறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பல்வேறு அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்விதமாக இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. எப்போது இந்த மாற்றங்கள் இருக்கும் என்றால், விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது, அந்த சமயத்தில் இந்த புதிய விதிமுறை மாற்றங்கள் குறித்த அறிவிப்பும் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.