கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரணும்.. பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை..!

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் கோரிக்கை விடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ - மாணவியர் உட்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; "காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன. வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன" என்று தெரிவித்தார். தொடர்ந்து, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.