இந்த வாரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறாது..!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நவ 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழக அரசால் நவ.18-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு முகாம் தேதிகளை நவ.18,19-க்கு பதில், நவம்பர் 25,26 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.