அமைச்சர் பொன்முடியை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு..!

செம்மண் குவாரி வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவிக்க மறுப்பு தெரிவித்த சென்னை ஐகோர்ட், அவர் தாக்கல் செய்த மனுவை மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த 2006 - 2011ம் ஆண்டுகளில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என கடந்த 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தாக்கல் செய்த ஆவணங்கள், வாக்குமூலங்களில் அமைச்சருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்த ஐகோர்ட், அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.