சனிக் கிரகத்தில் ஆய்வை நிறுத்தவிருக்கும் 'காசினி' விண்கலம்
Aug 11, 2017, 23:42 IST
|
சனி கிரகத்தை ஆராய்ந்துவரும் காசினி விண்கலத்தின் செயல்பாடுகள் வருகிற செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுகிறது என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1997ம் ஆண்டு அக்டோபர் 15ல் சனி கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் காசினி என்னும் விண்கலத்தை சனிக்கு அனுப்பியது. 2004, ஜூலையில் சனிக் கோளின் சுற்று வட்ட பாதையை அந்த விண்கலம் அடைந்தது. அன்றில் இருந்து, சனி கிரகம் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை ஆராய்ந்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதிலும், சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காசினி விண்கலம் சென்றடைந்தது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ம் தேதியோடு அது தனது ஆராய்ச்சியினை முடித்துக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சனி கிரகத்துக்கு மிக அருகில் பயணித்து ஆய்வு மேற்கொள்ளும் கடைசிகட்ட பயணத்தை காசினி விண்கலம் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை தொடங்க உள்ளது. காசினியின் 20 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வருவது இதுநாள் வரை அதை கண்காணித்து வந்த விஞ்ஞானிகளுக்கும் விண்வெளி அறிவியல் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in