கோவா முதல்வர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பேரணி!
கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு மாபெரும் பேரணியும் நடத்தியுள்ளன.
கோவாவில் மனோகர் பரிக்கர் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனோகர் பரிக்கர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அரசுப்பணிகள் தேங்கிக்கிடக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு முன்னெழுந்தது.
ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக தான் பதவி விலகுவதாக மனோகர் பரிக்கர் பா.ஜ.க தலைமையகத்துக்கு முன்னதாக கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், பா.ஜ.க தலைமையகம் அதனை ஏற்க மறுத்து, பரிக்கரே முதல்வராக தொடர வேண்டும் என கூறியது.
இந்த சூழ்நிலையில், முதல்வர் மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக முழு நேர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தியுள்ளனர். இதில் அக்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
முதல்வரின் இல்லம் நோக்கி நடந்த இந்த பேரணியை, பரிக்கர் வீட்டின் அருகே 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களுடன் போலீசார் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.
newstm.in
newstm.in