200 மணி நேரம் திட்டமிடப்பட்டது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2!
இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் சென்று, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு 200 மணி நேரம் இந்திய ராணுவம் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, உடனேயே இந்திய அரசு பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டது. தாக்குதல் நடைபெற்ற 10 நாட்களுக்குப் பின்னர், நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இந்திய விமானப்படை வீசியதில், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட சிஆர்பிஎப் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்திய அரசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிகிறது. இந்த தகவலில், மற்றொரு மிகப்பெரிய தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தயாராகி வருவதாகவும், இது புல்வாமா தாக்குதலை விட மிகப் பெரியதாக இருக்கும், என்றும் எச்சரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைச்சர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க ஆலோசனை நடத்தினர்.
தாக்குதலுக்கான இறுதி உத்தரவு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப்படை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட சந்திப்பில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
newstm.in
newstm.in