ஆந்திராவில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய மாநில அரசு
ஆந்திர பிரதேச மாநிலத்தில் தனியார் வசமிருக்கும் மதுக்கடைகள் அனைத்தையும் முற்றிலுமாக அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுக்கடைகளை குறைக்கவும், மது பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும், மத்திய அரசு பல வழிகளில் முயற்சிகள் மேற் கொண்டு வரும் நிலையில், தனியார் வசமிருக்கும் மதுக்கடைகள் அனைத்தையும் முற்றிலுமாக அரசுடைமையாக்க அம்மாநில முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் கே. நாராயண சுவாமி கூறுகையில், "அரசு கண்காணிப்பின் கீழ் இயங்கும் மதுக்கடைகளை விட தனியார் வசமிருக்கும் மதுக்கடைகளே நாட்டில் கூடுதலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மதுவினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். தனியார் வசமிருக்கும் மதுக்கடைகளை அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த பின்னர் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், மதுக்கடைகளின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 9 மணியாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சிகள் மூலம் மது அருந்துபவரிகளின் எண்ணிக்கையும் குறையும், மக்களின் உடல் நலமும் சீராக இருக்கும். தேர்தல் நேரத்தில் மதுக்கடைகளை முற்றிலும் மூடுவதாக மக்களுக்கு வாக்களித்திருந்தோம். அதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அடுத்த ஆண்டிற்குள் மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மொத்த மதுக்கடைகளையும் அடைக்கும் நோக்கத்துடனே அரசு இந்த செயல்களை செய்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Newstm.in
newstm.in