சபரிமலை மறுஆய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 13ம் தேதிதான் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பத்து வயதுக்கு முற்பட்ட அல்லது 50 வயதுக்கு பிற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் வழிபாடு நடத்த முடியும் என்ற பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் வகையில் அமைந்தது கடந்த மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலமெங்கிலும் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அதே சமயம், தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த 23ம் தேதி பரிசீலனை செய்தது. அப்போது, இந்த வழக்கில் நவம்பர் 13ம் தேதி விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், மறுஆய்வு மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை இன்று பரிசீலித்த நீதிபதிகள், வழக்கை உடனடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.
newstm.in
newstm.in