மகாராஷ்டிரா : பாஜகவிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அஜித் பவாரின் கடிதம்!!!
பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் எழுதியுள்ள கடிதத்தை தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், என.டி.பி கட்சியுடன் இணைந்த கடந்த சனிக்கிழமை காலை ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் இந்த திடீர் பதவியேற்பால் அதிர்ச்சியடைந்த முக்கட்சி தலைவர்களும், பாஜகவிற்கும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அவசர வழக்காக நேற்று இந்த மனு தாக்கலை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறப்படும் நிலையில், அவர் எதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களை இன்று காலை 11.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, இன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் அஜித் பவாரின் கடிதத்தையும் நீதிபதிகள் முன் சமர்ப்பித்துள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா.
பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முன் வருமாறு கோரிக்கை விடுத்திருந்த ஆளுநரின் அழைப்பை ஏற்று, இந்நிலை இம்மாநிலத்தில் தொடரக்கூடாது என்பதால், 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அஜித் பவார்.
Newstm.in
newstm.in