Logo

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: சோனியாவின் பெயரை குறிப்பிட்ட இடைதரகர் கிறிஸ்டியன்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையின்போது, இடைதரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தியின் பெயரை குறிப்பிட்டதாக, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 | 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: சோனியாவின் பெயரை குறிப்பிட்ட இடைதரகர் கிறிஸ்டியன்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையின்போது,  இடைதரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தியின் பெயரை குறிப்பிட்டதாக, டெல்லி நீதிமன்றத்தில்  அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் அவர் "சன் ஆஃப் இத்தாலியன் லேடி" என சொன்னார் என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறினர்.

விஐபிகளுக்கான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில்,  சிபிஐ காவலில் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த இடைதரகரான கிறிஸ்டியன் மைக்கேல்,  5  நாள்கள் அமலாக்கத் துறையின் காவலுக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார்.

அவரின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், கிறிஸ்டியனை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
இந்த வழக்கு விசாரணையின்போது கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா காந்தியின் பெயரை "திருமதி காந்தி"  எனக் குறிப்பிட்டார். ஆனால் எதற்காக அவர் சோனியாவின் பெயரை குறிப்பிட்டார் என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது.

மேலும் , ' " தி சன் ஆஃப் இத்தாலியன் லேடி" என்றும், அவர் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவுள்ளார் ' எனவும்,  விசாரணையின்போது கிறிஸ்டியன் கூறினார்.

அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டது என்பது குறித்தும், அந்த வாய்ப்பு டாடா நிறுவனத்துக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது பற்றியும் அவர் தெரிவித்தார்.

கிறிஸ்டியன் மைக்கேலுக்கும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையேயான உரையாடலின்போது, "பிக் மேன்", "ஆர்" ஆகிய சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்தும், கிறிஸ்டியன் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

எனவே அவரது காவலை மேலும் 8 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கிறிஸ்டியன் மைக்கேலின் அமலாக்கத் துறை காவலை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கிறிஸ்டியனின் வழக்குரைஞர்கள் அவரை தினமும் காலை, மாலையில் தலா 15 நிமிடங்கள்தான் சந்திக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்தது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP