பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்... பதவி விலகினார் ஹைதி பிரதமர்!
ஹைதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார்.
ஹைதியில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையுயர்வை கண்டித்து போராட்டங்கள் நடந்து வந்தன. இந்தநிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை அதிகரிக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன்படி, எரிவாயு 38 சதவிகிதமும் டீசலுக்கு 47%, மண்ணெண்ணெய் 51 சதவிகிதமும் விலை உயரும் நிலை ஏற்பட்டது. இதனால், கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
கடந்த சில நாட்களாக போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் போனது. அதில் ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் 2 பேர், சமூக போராளி ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவர் என 4 பேர் பலியாகினர். அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்களை அடுத்து ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த சூழலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட், தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஏற்றுக்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால், நான் பதவி விலகிவிட்டேன் என்றார்.
பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகல் கடிதம் அளித்ததையும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அந்நாட்டு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஹைதியில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எராளமானோர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டுவர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in