இலங்கையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பா?
இலங்கையில் தற்போது 25,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ளதாக, இலங்கையின் குடிவரவு குடியகல்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையின் வளர்ச்சித்திட்ட பணிகளிலும் இந்த நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்படுகின்றது. நெடுஞ்சாலைகளை அமைத்தல், கட்டிடப்பணிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த நாடுகளின் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப்படும் போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாக குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பதனால் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடிவரவு குடிகல்வுத்துறை தலைவர் நிஹால் ரணசிங்க இது குறித்து தெரிவிக்கையில்,
'சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் பணியாற்றவே அவர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டு சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் பணியாற்றவும் வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அத்துடன், அவர்களில் சிலர் இலங்கை பிரஜைகளை திருமணம் செய்துள்ளனர்' என்றார்.
newstm.in