இலங்கையில் தேயிலையின் உற்பத்தி அதிகரிப்பு!
இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேயிலை உற்பத்தி, கண்டி, காலி, ரத்தினபுரி, நுவரேலியா, திம்புள்ளை மற்றும் ஊவா ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தரும் முக்கிய ஏற்றுமதி பொருளாகும். இலங்கையில் தேயிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து, இது தற்போது கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் சராசரியாக 6 .7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 258.3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உயர் தரம் மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு அதிகரித்துக் காணப்படுவதால் அதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கையின் தேயிலையில் கெப்ரா என்ற வண்டு இனம் இருந்ததாக கூறி ரஷ்யா தடைவிதித்திருந்தது. பின்னர் ரஷ்யாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் அத்தடை விலக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் கெப்ரா என்ற வண்டு இனம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்கியதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
newstm.in