போதைப் பொருள் ஒழிப்பில் தீவிரம்... இலங்கைக்கு விருது
இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது, கடல் வழியாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகவும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. இந்த நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதாக கூறி இலங்கை ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
போதைப் பொருளுக்கு எதிரான தன்னார்வ நிறுவனங்களின் மாநாடு கடந்த ஆண்டு சீனாவில் நடந்தது. அந்த மாநாட்டில், போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் இலங்கைக்கு விருது அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு தன்னார்வ நிறுவனத்தின் தலைவர் சரத் எம் சமரகே இந்த விருதை நேற்று ஜனாதிபதியிடம் வழங்கினார்.
ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் ரவீந்திர ஃபெர்னாண்டோ கூறுகையில், "இலங்கையில் 45,000க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். ஆண்டுக்கு 1 1/2 டன் போதைப்பொருள் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.
கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 500 ஹெக்டேரில் சட்ட விரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், வருகிற 2020ம் ஆண்டுக்குள் இலங்கையில் போதைப் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது" என்றார்.
கடந்த 2017ம் ஆண்டு ரூ.990 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 29,690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 36 பேர் வெளிநாட்டினர். இவர்களுக்கு எதிராக 20,000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு விருது வழங்கியிருப்பதற்கு பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
newstm.in