பதவியில் நீடிக்க சிறிசேனா முயற்சி: ஜே.வி.பி குற்றச்சாட்டு
ஊழல், மோசடியாளர்களை நரகத்திற்கு அனுப்பிய பிறகு தான் பதவியில் இருந்து இறங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சூளுரைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜேவிபி -ன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய மைத்திரிபால சிறிசேனே, மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்த பின்பே பதவியில் இருந்து விலகுவேன் என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி, ”ஊழல், மோசடியாளர்களை நரகத்திற்கு அனுப்பிய பிறகு தான் பதவியில் இருந்து இறங்குவேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளதன் மூலம், தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றம் புரிந்தவர்களுக்கு மைத்திரிபால தண்டனை பெற்றுத் தர வேண்டும். மொட்டை வாளை சுழற்றிக்கொண்டு இருப்பதைவிட, நிதி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு மீட்டெடுக்கப்பட்டதா? திருடர்கள் சிறையில் அடைக்கப்பட்டனரா? என்று கேட்க விரும்புகின்றோம். ஆப்ரேஷன் 1 வெற்றியளிக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எதற்கு? செயல் வடிவம் எதுவுமின்றி பொதுமேடைகளில் வீரவசனம் பேசுவதால் எவ்வித பயனும் இல்லை" என்றார்.
newstm.in