கைதாகிறார் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே..? இலங்கையில் பதற்றம்!
இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ரனில் விக்ரமசிங்கேவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தி அடைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று இரவு திடீரென ராஜபக்ஷேவை புதிய பிரதமராக நியமித்துப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சிறிசேனா.
இதையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16-ம் தேதி வரை அதிபர் முடக்கி வைத்திருக்கும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக எம்.பி.க்களைத் திரட்டும் குதிரை பேரமும் கொழும்பில் தொடங்கிவிட்டது. இந்நிலையில், தானே இன்னும் பிரதமர் என்று சொல்லிவரும் ரனில் விக்ரமசிங்கேவை கைது செய்யும் முயற்சிகளும் தொடங்கிவிட்டனர்.
ரனில் கட்சியைச் சேர்ந்தவரும், அமைச்சருமான மங்கள சமர்வீர நேற்று தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வாகன வசதிகளையும் விலக்கிக் கொள்ள அதிபர் முடிவெடுத்திருக்கிறார். மோசடி பிரதமரான ராஜபக்ஷேவுக்கு அந்த வசதிகளைக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார். வெட்கக்கேடாக இருக்கிறது சிறிசேனா’’ என்று பதிவிட்டிருந்தார். இதன் அடுத்த கட்டமாக நேற்று அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளரும் ராஜபக்ஷேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் ரனிலைக் குற்றம் சாட்டி அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிவிக்கின்றன கொழும்பு ஊடகங்கள்.
கொழும்பில் உள்ள தன் வீட்டில் ஊடகத்தினரை சந்தித்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குநர் நாமல் குமார, “இந்த சதி முயற்சியின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் ரனிலின் பாதுகாவலர்கள், வாகனங்கள் அகற்றப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் ரனில் கைது செய்யப்படுவதற்கான முன் நடவடிக்கை எனக்கூறுகின்றனர்.
தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் ஒரு முக்கிய பிரபலம் இருப்பதாக முன்பே சிறிசேனா தெரிவித்திருந்தார். அவரது பெயரை வெளியிட்டால் நாடே அதிர்ச்சி அடையும் என்றும் அவர் கூறியிருந்தார். இப்போது ரனில் மீது அந்த குற்றத்தைச்சாட்டி அவரைக் கைது தீவிரமான ஏற்பாடுகள் நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை அறிந்த ரனில் கொழும்பில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களைத் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என்னைக் கொல்ல நடந்த சதியில் ஒரு அமைச்சருக்கும் பங்கு இருக்கிறது. அதனால்தான் வேறு வழியின்றி நான் பிரதமரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஆக, ரனில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.
newstm.in
newstm.in