கட்சியிலேயே இல்லாத எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் சர்ச்சை
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டு, பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியை இழந்த நிலையில், தற்போது அவரை எதிர்க்கட்சித் தலைவராக, சபாநாயகர் கரு ஜெயசூரியா அங்கீகரித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேன, தனது கூட்டணி கட்சித் தலைவரும், அந்நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தையும் கலைத்தார். இது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ராஜபக்சே தோற்றார். இதைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், சிறிசேன மற்றும் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் விடுதலை இயக்கம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதால், அக்கட்சியின் ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரியா. ஆனால், ராஜபக்சே, அக்கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில், தனது சகோதரர் பசில் துவக்கிய இலங்கை பொதுஜன கட்சியில் சேர்ந்த நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கட்சி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
newstm.in
newstm.in