இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமில்லை - ஞானதேரர்
யாழ்ப்பாணத்தில் ஒரு பௌத்த குருவின் உடலை தகனம் செய்ய முடியாத சூழலில், எவ்வாறு நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் என கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 19ம்தேதி பௌத்த குரு மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலை முனியப்பர் ஆலயம் மற்றும் தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடம் அமைந்துள்ள பகுதியிலும் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இது தமிழர்களின் உணர்வுகளை புண்டுத்துவதோடு பண்பாட்டையும் சீரழிக்கும் நடவடிக்கை எனக்கூறி தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பௌத்த குருவின் உடலை, முனியப்பர் ஆலயம், தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவிடம் அமைந்துள்ள பகுதியிலேயே தகனம் செய்ய வேண்டும் என யாழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த பகுதியிலேயே பௌத்த குருவின் உடலை தகனம் செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து ராணுவப் பாதுகாப்புடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்த, வரும் ஜனவரி 8ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தேசிய நல்லிணக்க வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ். நாக பௌத்த ஆலையத்தின் முன்னாள் பௌத்த குரு மேகாஜதுரே ஜானாத்தன தேரர் மரணம் அடைந்ததையடுத்து அவரது உடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படியாயின் இவர்களின் நல்லிணக்கம் இதுவா?. இவ்வாறு செயற்பட்டு எப்படி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமயிலும் மனோ கணேசன் தலைமையிலும் நல்லிணக்கம் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் யாழில் இவ்வாறான செயற்பாடுகள் நடக்கும் போது இப்படி நல்லிணக்கம் ஏற்படும்.
தற்போது சிறுபான்மை மக்கள் தமது ஆதிக்கத்தை வளர்த்து வருகின்றனர். நாட்டின் முக்கியமான அமைச்சர்கள் பலர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இவர்களின் செயல் திறனை பார்த்து சிங்கள தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் தற்போது சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிகளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் என்றார்.
newstm.in