தமிழர் நிலங்களில் கடற்படைத் தளம்... மக்கள் எதிர்ப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்ய கடற்படைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்பும் இதே நிலை அங்கு தொடர்கின்றது. ராணுவ அதிகரிப்பால் நுற்றுக்கணக்கான மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்ககோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகள் இதுவரையில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், முல்லைத்தீவில் கடற்படைத் தளத்துக்காக, மக்களுக்குச் சொந்தமான 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது. காணி மறுசீரமைப்பு அமைச்சகம் மற்றும் காணி மறுசீரமைப்பு சபையின் செயலாளர் சம்பத் சமரகோன் இதற்கான அனுமதியை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர் பகுதியில் உள்ள ராணுவத்தினரை வெளியேற்றுமாறு தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், ராணுவம் புதிய முகாம்களை வன்னிப்பிரதேசத்தில் அமைத்து வருகின்றது.
வன்னியில் அமைந்துள்ள இலங்கை ராணுவத்தின் 621 படைப்பிரிவு தலைமையகத்தில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. வன்னியின் ராணுவ தளபதி குமுது பெராரா, புதிய கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வு சிங்கள பாரம்பரியமான கண்டி நடனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in