இலங்கை பிரதமர் மீது தாக்குதல்? நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் மீது கூட்டு எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இலங்கை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மத்திய வங்கி நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் பேசினார். ஆனால் அவரை பேச விடாமல் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், ஆளுங்கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் 'மகிந்த திருடன்' என்று கோஷமிட்டனர். மகிந்த தரப்பினர் 'ரணில் திருடன்' என்று பதில் கோஷங்களை எழுப்பினர். திடீரென்று ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். இதனால், இலங்கை நாடாளுமன்ற மையப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில், சில உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் கையில் கிடைத்த காகிதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தனர். இது பிரதமர் மீதும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றம் வரும் 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
newstm.in