வங்கதேச முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவுக்கு 7 ஆண்டு சிறை!
வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான கலேதா ஜியா மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் வழக்கில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளது வங்கதேச நீதிமன்றம்.
8 ஆண்டுகளுக்கு முன்னால், வங்கதேசத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை கலேதா ஜியா மீது ஊழல் வழக்கை பதிவு செய்தது. அவர் நடத்தி வந்த ஜியா தொண்டு நிறுவனத்தில் இருந்து, சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு திருடியதாக ஜியா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேறு ஒரு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜியா, இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகாவில்லை.
அவரை கொண்டு வருவதில் சிறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதால், அவர் இல்லமலே வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. தாக்காவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில், தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. ஜியா தவிர, அவரது அரசியல் விவகாரங்கள் செயலாளர் ஹாரிஸ் சவுத்ரி, சவுத்ரியின் உதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா, தாக்கா நகர மேயரின் உதவியாளரான மொனிருல் இஸ்லாம் கான் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். சவுத்ரி தலைமைறைவான நிலையில், மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
முன்னாள் பிரதமர் ஜியா உட்பட குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி.
தனது கணவர் பெயரில் நடத்தப்பட்டு வந்த ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் நிதியை சுரண்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம், ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வரும் டிசம்பர் மாதம், வங்கதேசத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், இரண்டாவது வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in