ஏமன்: போரில் 58 பேர் உயிரிழப்பு
ஏமனில் நிகழ்ந்துவரும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக இந்தப் போர் நீடித்து வருகிறது. அதிபர் படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக போரிட்டு வருகின்றன.
நேற்று நடந்த தரைவழி மற்றும் வான் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என அதிபர் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
newstm.in