Logo

தொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்

தமிழர்களின் வாழ்வோடு கலந்தவன் சிவகுமாரன். நமது மனதுக்கு நெருக்கமான முருகப் பெருமான் வழிபாடு பல தலைமுறைகள் தொடரும் பண்பாட்டு பழக்கம். தேவ படையின் சேனாதிபதி என்று போற்றப்படும் முருகன், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பெருந்தொல்லையாக விளங்கிய அசுரன் சூரபத்மனை அழிப்பதற்காகவே ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தவர்.
 | 

தொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்

தமிழர்களின் வாழ்வோடு கலந்தவன் சிவகுமாரன். நமது மனதுக்கு நெருக்கமான முருகப் பெருமான் வழிபாடு பல தலைமுறைகள் தொடரும் பண்பாட்டு பழக்கம். தேவ படையின் சேனாதிபதி என்று போற்றப்படும் முருகன், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பெருந்தொல்லையாக விளங்கிய அசுரன் சூரபத்மனை அழிப்பதற்காகவே ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தவர்.

அழகன் முருகனின் ஆறுபடை வீடுகளும் தைப்பூச திருவிழாவிற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்க்கடவுள் என்று கொண்டாடப்படும்   முருகப் பெருமானுக்கு எடுக்கப்படும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது தைப்பூசம் ஆகும். நட்சத்திரங்களில்  எட்டாவது நட்சத்திரமாக மிளிரும் பூசம், தை மாதத்திலே வரும் போது மகத்துவம் பெற்று விடுகிறது. தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல வாழ்க்கையில் நாம் உணரும் சத்தியம்.

                                                 தொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்

பெரும்பாலும் நிறை பௌர்ணமி நன்னாளில் தைப்பூசம் வருவது வழக்கம். இந்த நாளில் ஆறுபடை வீடுகளில்  மட்டுமின்றி, அனைத்து முருகன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் திருவிழாவினைப் போல் தைபூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் ,அலகு குத்திக் கொண்டும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

 

தந்தை ஈசன் உயிர் கொடுத்தான்,தாய் பார்வதி தேவியோ ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கினாள்.இது நிகழ்ந்தது  தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா ஏனைய முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வேல் என்ற சொல்லை  மனதார உச்சரித்துப் பாருங்கள்...உடல் முழுக்க ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கது அந்த ஒற்றைச் சொல். பகைவர்களின் சிரமறுக்க மட்டுமின்றி தன்னை நோக்கி வணங்கும் அடியவர்களின் துன்பத்தை வேரறுக்கவும் அந்த வேலுக்கு தெரியும். அதனால் தான் வேலுண்டு வினையில் என்பார்கள்.

தாய் உமையவளிடம் இருந்து பெற்ற ஞானவேல் கொண்டு, முருகப்பெருமான் போரில் வெற்றிப்பெற்றதால் வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காது என்பது ஐதீகம்.

தைப்பூச விரதம் இருக்கும் முறை

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் இருந்து துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற முருகனருள் பெற உதவும்  பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கள்  விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

இன்றும் முருகனடியார்கள் பலர், பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.மேலும் தீராத நோய்களால் அவதிப்பட்டவர்கள், முருகனுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டு,அது நிவர்த்தியானதும், பழனி முருகன் கோவிலில் தைப்பூச தினத்தன்று காவடி நேர்த்திக்கடனை செலுத்துவதை இன்றும் காண முடியும்.

                                                    தொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்

 காவடித் தூக்குதல்- புராண கதை  

தங்கள் மனதிற்கு பிடித்த கடவுளுக்கு தங்கள் மனம் போல் நேர்த்திக்கடன்களையும் பிரார்த்தனைகளையும் செய்வது அடியவர்கள் இயல்பு. விநாயகருக்கு தேங்காய் உடைப்பது, அனுமனுக்கு வடை மலை சாற்றுவது,அம்மனுக்கு தீக்குழி இறங்குவது என சொல்லிக்கொண்டே போகலாம்.  அந்த வகையில் முருகன் என்றதும் நம் நினைவிற்கு வருவது,காவடி தூக்குதல். இதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். காவடி  தூக்கும் பிரார்த்தனை எப்போது தோற்றம் கண்டது?

பொதிகை மலையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த.அகத்திய மாமுனிவர், தமது சீடர்களில் ஒருவரான இடும்பனை கைலாய மலைக்குச் சென்று அங்கு முருகனுக்குச் சொந்தமான இரட்டை மலைகளான சிவகிரி, சப்தகிரி இரண்டையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். குருவின் கட்டளையை ஏற்ற இடும்பன் கைலாய மலைக்கு வந்து, அங்குள்ள அந்த இரு மலைகளையும் கட்டி, தோளுக்கு ஒரு மலையாக தமது இரு தோள்களில் சுமந்துச் சென்றார்.

மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் அன்றோ?முருகனுக்கு  அந்த இரு மலைகளை திருவாவினன்குடியில் (பழனி) வைக்க எண்ணம். அதே வேளையில் இடும்பனின் பக்தியைச் சோதிக்கவும் அவரது பெருமையை உலகுக்குப் பரப்புவதும் அவரது நோக்கமாக இருந்தது.

தோள்களில் மலைகளைச் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்த இடும்பன் தனது வழியை மறந்துவிட்டார். அந்த வழியே செல்லும் ஓர் அரசனாகத் தோன்றிய முருகன், தான் வழிகாட்டுவதாகச் சொல்லி இடும்பனை திருவாவினன்குடிக்கு (பழனி) அழைத்துச் செல்கிறார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று முருகன் கூற, இடும்பன் தான் சுமந்து வந்திருக்கும் இரு மலைகளையும் தனது தோளிலிருந்து இறக்கி வைக்கிறார்.

இளைப்பாறிய பிறகு, அந்த மலைகளை மீண்டும் தூக்குவதற்கு முயன்ற இடும்பன் அதிர்ச்சியுற்றார்.  மலையைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. களைத்துப் போன இடும்பன், அந்த இரு மலைகளில் ஒன்றின் உச்சியில் கோவனத்துடன் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். அந்தச் சிறுவனைக் கீழே வரும்படி இடும்பன் கூறினார். ஆனால், சிறுவனோ மலை தன்னுடையது, இறங்க முடியாது என்று சொல்ல, கோபம் கொண்ட இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.

இறுதியில் அந்தச் சிறுவன்தான் சிவகுமாரனான முருகன் என்று உணர்ந்த இடும்பன் தன் தவறுக்கு வருந்தி சிறுவனை வணங்கினார். தான் இரு மலைகளைச் சுமந்து வந்தது போல, ஒரு கோலின் இருபுறங்களிலும் சந்தனம், பால், மலர்கள் போன்ற திவ்ய பொருட்களைக் காவடியாகச் சுமந்து வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற வரத்தினை முருகனிடம் இருந்து பெற்றான் இடும்பன்.

காவடி தூக்குவதாக நேர்ந்துக் கொள்ளும் பக்தர்கள், தைப்பூசத்துக்கு முன்  48 நாட்களுக்கு விரதம் இருந்து உடலாலும்,மனத்தாலும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.  இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதால், குழந்தைகளுக்கு காது குத்துதல், திருமணப் பேச்சு தொடங்குதல் போன்றவற்றை ஆரம்பிப்பார்கள்.

இந்த தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து,காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கந்த சஷ்டி கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். முருகன் திருக் கை வேலை வணங்குவதே வேலையாக  கொண்டவர்களுக்கு எந்நாளும் எப்பொழுதும் சுபமே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP