கடன் வாங்காதே
லட்சுமிந்த் மும்பையைச் சேர்ந்த ஒரு அச்சகத் தொழிலாளி. அவனுக்கு ஒரு கனவு வந்தது. ஒரு வயதான மனிதர் தாடியும், கந்தல் ஆடையுமாக இருந்தார். அவரை சுற்றிலும் ஏராள மனிதர் கூட்டம். இது தான் அவரின் கனவு. இந்தக் கனவு ஏன் வந்தது? அதில் தெரிந்த மனிதர் யார்? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.
ஒரு நாள் பஜனை கச்சேரி ஒன்றை காண்பதற்காகச் சென்றிருந்தான். அங்கே சாய்பாபாவின் படம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தையே வெகுவாக உற்று பார்த்தான் லட்சுமிசந்த். அந்தப் படத்தில் இருப்பவர், தனது கனவில் வந்தவர் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவரைப் பற்றி அங்கே விசாரித்தான். உடனே ஷீரடிக்கு சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. உடனே புறப்பட்டு விட்டான்.
வழியில் கோபர்கான் என்ற இடத்திற்கு வந்தபோது சாய்பாபாவிற்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று தோன்றியது . ஆனாலும், ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்ற படபடப்பில் அப்படி எதையும் வாங்காமலேயே அங்கே சென்று விட்டான். அப்போது மாட்டு வண்டியில் வந்த பெண்மணி ஒருவர், "சாய்பாபாவை தானே தரிசனம் செய்யப் போகிறாய்?" என்று கேட்டாள் . " ஆமாம்" என்றான் லட்சுமிசந்த் " அப்படியானால் சாய்பாபாவிடம் இந்த மாம்பழங்களை என் சார்பாகக் கொடுத்து விடுகிறாயா" என்று கூடையைக் காண்பித்தாள் .
தன்னால் தான் எதனையும் வாங்க முடியவில்லை, இந்தப் பெண்மணி தருவதை அப்படியே சாய்பாபாவிடம் கொடுத்துவிடலாம் . தான் அந்த மாம்பழங்களைக் கொடுத்த மாதிரியும் இருக்கும் என்று எண்ணி, அதனை சாய்பாபாவிடம் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டான் அவன். பின்னர் சாய்பாபாவைத் தரிசனம் செய்த லட்சுமிசந்த், அந்த மாம்பழங்களையும் அவரிடம் அளித்தான். அப்போது அவனிடம் சாய்பாபா, "கனவில் கண்ட மனிதர் இவர்தானா என்ற சந்தேகத்துடனேயே என்னைப் பார்க்க வந்தாய். சரி ,பரவாயில்லை. ஆனால் அதற்கு வேறொரு வரிடம் இருந்து பழங்களைக் கடனாகப் பெற்று வந்திருக்கிறாயே ! " என்று கூறினார் சாய்பாபா.
அவன் அதிர்ந்து போனான். தன் உள்ளத்தில் இருப்பதும், தான் பழங்களை அந்தப் பெண்மணிடம் இருந்து பெற்று வந்திருப்பதையும் சாய்பாபா எப்படி அறிருந்தார். இவருக்குள் இருக்கும் அந்த மகாசக்திதான் என்ன? அப்படியே நெடுஞ்சாண்கிடையாக சாய்பாபாவின் பாதங்களில் விழுந்தான் லட்சுசந்த். பொதுவாக சாய்பாபாவிற்கு, இதுபோன்று கடன் பெற்று வந்து கொடுப்பது சுத்தமாகப் பிடிக்காது.
ஓம் ஸ்ரீசாய்ராம் !!!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in
newstm.in