உண்மையான இருதயமே கடவுளை காணும்
ஒவ்வொரு குரு பௌர்ணமி அன்றும் துவாரகா மயியில் பக்தர்களோடு அமர்ந்திருப்பார் சாய்பாபா. அப்போது பக்தர்கள் பாராயணப் புத்தகங்களைக் கையில் எடுத்து வந்து சாய்பாபாவிடம் கொடுப்பார்கள். சாய்பாபாவின் ஆசீர்வாதம் பெற்று அதிலுள்ள பாராயணத்தைப் படிப்பது அவர்களின் விருப்பமாக இருக்கும்.
புத்தகங்களை வாங்கும் சாய்பாபா, அதனை வாங்கிப் பார்த்து பின்னர் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் அதே பக்தரிடம் கொடுத்து விடுவார் . அதனைப் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு பாராயணம் செய்வார் அந்த பக்தர் சில நேரங்களில் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, அதனை வேறொரு பக்தரிடம் கொடுப்பார் . மற்றவரது புத்தகத்தை இவரிடம் மாற்றிக் கொடுப்பதும் உண்டு இதற்கு என்ன அர்த்தம் என்பது சாய்பாபாவிற்கு மட்டுமே தெரியும். இது போன்ற ஒரு சூழலில் ஒரு பௌர்ணமி தினம் வந்தது. அன்று எல்லா பக்தர்களும் ஏதோ ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்கள். ஆனால் “ரே” என்றொரு பக்தர் மட்டும் புத்தகம் எதுவும் எடுத்துவராமல் சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெற வரிசையில் நின்றிருந்தார்.
அவரை பார்த்த சாய்பாபா, ” நீ செய்வது தான் சரி எந்தப் பாராயணத்தையும் படிக்காதே. இந்த ஜனங்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தில் உள்ள பாராயணத்தில் கடவுளைக் காண்பதாய் நினைக்கிறார்கள். ஆனால் அவைகளில் வெறும் பிரம்மையைத்தான் அவர்கள் காண்பார்கள். ஆனால் உன் இதயத்தில் என்னை அழுத்தமாக வைத்து உள்ளமும், மனமும் ஒருமுகப் படுத்தினாலே போதும். கடவுளைக் காணமுடியும் " என்றார்.
ஓம் ஸ்ரீ சாய்ராம்.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in