Logo

சோமாசிமாற நாயனார் -63 நாயன்மார்கள்

வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும் போது நான்கு நாய்களை கையில் பிடித்தபடி, மகன்கள் இருவரும், மனைவி ’கள்’ குடத்தை சுமந்தப்படியும் புலையன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள்...
 | 

சோமாசிமாற நாயனார் -63 நாயன்மார்கள்

சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார். சிவபக்தியும் சிவனடியார்களுக்கு திருவமுதமும் அளித்து மகிழ்ந்திருந்தவர் இவர். அகிலத்தை எல்லாம் கட்டிகாக்கும் பரமனே முதல்வன் என்று வேள்விகள் பல செய்து உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்படுகிறார்.

சோமாசி மாறருக்கு யாகத்தீயில் தாம் பூஜிக்கும் பழங்கள், வஸ்திரங்கள், நைவேத்ய பொருள்கள் போன்றவற்றைச் சிவனாரே நேரில் வந்து பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல  அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார். எம்பெருமானுக்கும், சுந்தரராருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னமே அறிந்திருந்தார் சோமாசி மாற நாயனார்.

சுந்தரராரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார். அப்போது தான் சுந்தரராருக்கு தூதுவளை கீரை பிடிக்கும் என்பதை அறிந்தார். அதனால் தூதுவளைக்கீரையைத்  தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை  வளர்க்கலாம் என்று தினமும் ஆற்றில் குளிக்கும்போது அடுத்தக்  கரைக்கு நீந்திச்சென்று தூதுவளைக்கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரராருக்கு கொடுத்து சென்றார். அதனால்  சுந்தரராருக்கு இவர் மீதான அன்பு அதிகரித்தது.

ஒருநாள் சுந்தரராரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார் சோமாசியார். நிச்சயம் உனது விருப்பம் நிறைவேறும் என்று வாக்கு கொடுத்த சுந்தர ரார் இறைவனிடம் தெரிவித்து அவரது சம்மதமும் வாங்கினார். ஆனால் இறைவன் பதிலுக்கு ஒரே ஒரு நிபந்தனையையும் விதித்தார். வேள்வி நடத்தும் போது எந்த ரூபத்திலும் வருவேன் என்பதை மட்டும் அவரிடம் தெரிவித்துவிடு என்றார்.

சுபமுகூர்த்த நாளில்  சோமாசியாரின் வேள்வியில்  இறைவனும் கலந்துகொள்ள போவதாக மக்களுக்கு சொல்லவும் அவர்களும் வெள்ளமென திரண்டார்கள். வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும்போது நான்கு நாய்களை கையில் பிடித்தபடி, மகன்கள் இருவரும், மனைவி ’கள்’ குடத்தை சுமந்தப்படியும் புலையன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள் நுழைந்தான். இவனைக் கண்டு வேதியர்கள் ஓடினார்கள். ஆனால் சோமாசிமாறனார் முதல் தெய்வமான விநாயகரைத் துதித்து யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார்.வந்திருப்பது இறைவனே என்று உணர்த் தினார் விநாயகர்.

சோமாசிமாறநாயனார் புலையனை வரவேற்று அவருக்கு வேண்டிய அவிர் பாகத்தை அளித்தார். அடுத்த நொடியில் புலையனோடு வந்த நாய் கள்  நான்கு வேதங்களாக மாற… எம்பெருமான் உமையாளோடு இடப வாகனத்தில் காட்சி தந்து அருளினார்.சிவத்தலம் தோறும் தரிசனம் செய்து எம்பெருமானின் திருவருளைப் பெற்று இறைவன் பாதத்தில் பணிந்தார். வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது, 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP