குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் - குங்கும பஞ்சதசி
நமது இந்துமத சாஸ்த்திரத்தில் மங்கல பொருட்கள் என குறிக்கப்படுவதில் குங்குமம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களின் முகத்திற்கு அழகினையும் மங்கலத்தையும் சேர்ப்பது குங்குமம். பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
நெற்றியில் குங்குமத்தை வைப்பதற்கும் சில நெறிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். குங்குமத்தை மோதிர விரல் கொண்டு தான் இடவேண்டும். கோயிலில் குங்குமத்தைப் பெறுகையிலும்,வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் உணரலாம். மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் போது,பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு மற்றவர்களுக்குக் கொடுப்பதால், தருபவர் பெறுபவர் இருவருக்கும் அன்னை காமாட்சி அன்னையின் அருளால் மாங்கல்ய பலம் பெருகும்.
வெள்ளிக்கிழமை,செவ்வாய்க்கிழமைகளில் குங்கும பஞ்சதசி பாராயணம் செய்து அன்னை காமாட்சியை மனதில் இருத்தி குங்குமம் இட்டுக்கொள்ள சர்வ மங்கலமும் பெருகும்.
குங்கும பஞ்சதசி
குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமதளிப்பது
குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது.
விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனையாள்வதும் குங்குமமாமே
தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேர்க்கு அபயமளீப்பதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே
செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே
நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே
சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே
நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே
சிவசிவ என்று திருநீறணிந்த பின்
சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே
எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே
அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே
குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே
பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணீந்தே
இட்டார் இடர் தவிர் குங்குமமாமே
சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீடடைவீரே
மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்குமாமே.
newstm.in