ஏசுவை திட்டிய பக்தர்.. கண்டிப்புடன் உணர்த்திய சாய்பாபா..
சீரடியில் அரிசீதாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்து மதத்தில் தீவிர பற்று உள்ளவர் அரிசீதாராம் தீட்சித். அவர் ஒரு நாள் தன்னையும் அறியாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஏசுவையும் அவர்தம் கொள்கைகளையும் தரக்குறைவாகப் பேசிவிட்டார். ஆனால், தீட்சித் அதனை மறந்து விட்டு வழக்கம் போல் மசூதியில் உள்ள சாய்பாபாவை தரிசிக்க வந்தார்.
முற்றும் உணர்ந்த சாய்பாபா, " அன்பனே ! சற்று நில்! என்னை தரிசிக்கும் தகுதி இப்போது உனக்கு இல்லை!" என்றார். அரிசீதாராம் தீட்சித்துக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு. "உனக்கு ஒன்றும் விளங்கவில்லையா?" என்றார் சாய்பாபா." ஆமாம் அன்பு சுடரே !"என்றார் தீட்சித் "ஏசுவை திட்டுவதற்கு உனக்கு என்ன அருகதை உள்ளது.
உன் சாய்பாபாவையோ பரமனையோ யாராவது திட்டினால் உன் மனம் என்ன பாடுபடும். உத்தம சீலரை உதாசீனப்படுத்தலாமா? உன் ஆன்மாவுக்கு அல்லா யார்? ஏசு யார்? கிருஷ்ணன் யார்? சிவன் யார்? என பகுத்துணரும் பக்குவம் இருப்பின் இப்படி பேசியிருக்க மாட்டாய்? இவ்வுலகில் அல்லாவும் - அரியும் ஒன்று என்று என் வாயிலாக உணர்ந்த தாங்கள் ஏசுவை ஏற்காமல் ஏசலாமா?" என்றார் ஞானி சாய்பாபா.
அரிசீதாராம் தீட்சித் அவர்கள், கண்ணீர் மல்க சாய்பாபாவின் பாதங்களைப் பற்றி, “அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருள்க கருண்ய மூர்த்தியே!” எனக் கதறி அழ ஆரம்பித்தார். பக்தனின் மனநிலையை உணர்ந்த சாய்பாபா, தீட்சித்தை தடவி கொடுத்து, "தவறை உணர்ந்த மறுகணமே மனத் தூய்மையுற்றாய் !உனது அஞ்ஞானத்தை அகற்றி ஆட்கொண்டோம்!" என்றார் சாய்பாபா.
ஓம்ஸ்ரீசாய்ராம் !!!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
newstm.in