மரணத்தை அறிந்த சாய்பாபா - பாகம்.7
தனக்கு மரணம் எப்போது வரப்போகிறது என்பதை அறிந்திருந்தார் சாய்பாபா.அவர் எந்தவொரு விஷயத்தையும் நேரடியாகவோ ,தெளிவாகவோ கூறுவது கிடையாது. ஏதோ மூன்றாவது நபர் சார்ந்த ஒரு விஷயமாகவே சம்பவங்களாகப் பேசுவார் . அதனை மிகவும் நுணுக்கமாகக் கவனித்து உணர்ந்தால் மட்டுமே உண்மை விளங்கும்.
அப்படித்தான் அந்த ஆண்டு தசரா பண்டிகை கொண்டாடப்படும் தினம் . விஜயதசமி விழாக்கள் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வழக்கம் போலவே ஊர் எல்லைக்குச் சென்று, உலாவி விட்டு , மசூதிக்குத் திரும்பினார் சாய்பாபா. அதுவரை எப்பொழுதும் போலவே அமைதியாகவும் ஆழ்ந்த சிந்தனையுடனும் காணப்பட்டார் .
துனி எதிரே வந்து நின்றார் அதனையே , அந்த தீ ஜுவாலையையே சற்று நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தவாறு இருந்தார். திடீரென்று ஆவேசம் வந்தவர் போல் காட்சியளித்தார். அவர் விழிகள் இரண்டும் நெருப்புத் துண்டங்கள் போல் சிவப்பாக மாறின. தன்னுடைய தலையில் அணிந்திருந்த துணி கஃப்னி உடை, லங்கோடு அத்தனையையும் கழற்றினார். துனியில் விட்டெறிந்தார் .
முழு நிர்வாண நிலையில் இருந்த சாய்பாபா, ஆத்திரமாகவும் கோபாவேசமாகவும் அங்கிருந்த பக்தா்களைப் பார்த்தார். ஏதேதோ சொல்லி உரக்கக் கத்தினார். அங்கு கூடியிருந்த பக்தா்கள் அனைவரையும் சாய்பாபாவின் இந்த நடவடிக்கை பயத்தில் உறைய வைத்தது. நடுநடுங்கிவிட்டார்கள் . “பாகோஜி சிந்தே” என்ற பக்தா் மட்டுமே தைரியமாகப் சாய்பாபா அருகில் சென்று மற்றொரு லங்கோட்டை சாய்பாபாவிற்குக் கட்டினார் .
அன்றிரவு பதினோரு மணி வரை சாய்பாபாவும் ஆத்திரம் தணியாமலேயே இருந்தார். இதனால் வழக்கமாக நடைபெறும் சாவடி ஊர்வலம் நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் பக்தா்களிடையே எழுந்தது .ஆனால் பதினோரு மணிக்கு பிறகு ஆத்திரம் அடங்கியவராக அமைதியடைந்தார் சாய்பாபா சாதரண நிலைக்கு வந்தார். வேறு உடைகளை அணித்துகொண்டார். சாவடி ஊர்வலத்தைத் தொடங்குமாறு கட்டளையிட்டார் அந்த ஊர்வலத்திலும் அவர் உற்சாகமாக பங்கேற்றார்.
இதன் பொருள் என்ன என்பது பிறகுதான் பக்தா்களுக்கு விளங்கிற்று. அதாவது, தனது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டதைத்தான் சாய்பாபா இப்படி உணர்த்தியிருக்கிறார். இந்த உடல் என்பது எதுவுமே கிடையாது வேறுபாடுகள் அனைத்தும் பொய்யானவை. அனைவருமே சதோதர்கள். ஒற்றுமையுடன் வாழ்வதொன்றே நமது கடமை. இதனை உணா்த்துவதற்காக எடுத்த இந்த உடல் விரைவில் மறையப் போகிறது என்பதை, சாய்பாபா இப்படி உணா்த்தியிருக்கிறார் என்பதன் உண்மை அதன்பிறகே அனைவருக்கும் புரிந்தது. (தொடரும்)
வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in
newstm.in