கேட்டதை கேட்டபடி வாரி வழங்கும் ஸ்ரீசக்கர வழிபாடு!
சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடானது, நமது நாட்டின் பல இடங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்புதான், அம்பாளின் எந்திரமான ஸ்ரீசக்கரம். நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம், அம்பிகையின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம்.
காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு, ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்வதும், அதை தனிப்பட்ட முறையில் வழிபாடு செய்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி உபதேசம் பெற்று, உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால், பல நல்ல பலன்கள் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் பல கோவில்களில், ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. சிதம்பரத்தில் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த வடிவமாக இருக்கும் ஸ்ரீசக்கரம், சிதம்பர ரகசியமாக வழிபடப்படுகிறது. ஸ்ரீ சக்கரம், எங்கு இருக்கிறதோ அங்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம்.
தமிழகத்தில், ஸ்ரீசக்கரங்கள் அமைந்த பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பல உண்டு. காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே, அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
சென்னை, பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புணுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.
கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே, தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார்.
கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்கரமே.
அம்பிகையானவளின் உக்கிரத்தை தணிக்க சர்வேஸ்வரன், அந்த உக்கிரக் கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து, ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து, சாந்தமடையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த வழிபாட்டில் ஈடுபடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதே சமயம், பூரண பக்தியுடன், அம்பாள் உபாசகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பிகையை வேண்டினாள், அவளே, சிறந்த குருவை நமக்கு காண்பிப்பாள்.
ஸ்ரீசக்கர வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் கேட்டது கேட்ட படி கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அம்பாளே உங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க ஆரம்பித்து விட்டால், அதற்கு மேல் வேறென்ன வேண்டும்?
newstm.in
newstm.in