தீங்கிழைப்பவனுக்கு நரகத்தில் பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்...
பிறருக்கு இழைக்கும் தீங்குகள் நமக்கான பலனை அளிக்காமல் நிச்சயம் விலகாது. அறிந்து செய்தாலும் சரி அறியாமல் செய்தாலும் எல்லாமே தர்மத்தின் முன்பு தவறுதான். இறைவனும் அத்தகையோருக்கு எவ்வித உதவியும் புரிவதில்லை.
தபோவலம் பெற்ற ரிஷிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். பூலோகம், தேவலோகம், யமலோகம் என மூன்று உலகங்களிலும் சகல மரியாதை யோடு வலம் வரும் வலிமை பெற்றவர்கள். பிறருக்கு வரம் அளிக்கவும், சாபம் கொடுக்கவும் உரிய சக்தியைப் பெற்றவர்கள். எங்கு செல்ல விரும்பினாலும் யமலோகம் செல்ல மட்டும் யாருமே விரும்ப மாட்டார்கள்.
காரணம் ஒவ்வொரு மனிதனும் செய்த தவறுக்கு கிடைக்கும் தண்டனையைக் காண பார்ப்பவர்களின் மனம் சற்றும் அமைதியடையாது. ஒரு முறை யமலோகத்தைச் சுற்றி பார்க்க ரிஷி ஒருவர் விரும்பி யமலோகம் சென்றார். அவரை வரவேற்ற யமதர்மன் இவ்வளவு தூரம் தாங்கள் வர என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளலாமா? என்றார்.
நான் வருவது உனக்கு இடையூறாக இருக்கிறதா என்று கேட்டார் ரிஷி. அபச்சாரம். அப்படியொரு வார்த்தையை நான் சொல்வேனா என்றார் யம தர்மனும் எச்சரிக்கையோடு. ஒன்றுமில்லை யமலோகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பி வந்தேன். உன் பணியை நிறுத்தாமல் யாரையாவது என் உடன் அனுப்பி வை என்றார் ரிஷி.
யமதர்பாருக்கு அழைத்து சென்றார். அங்கு தண்டனையின் தீவிரத்தை அறிந்து கொள்ள ஆன்மாக்கள் வரிசை யில் நின்றிருந்தன. தண்டனைக் கேற்ப கடுமையான யமகணங்கள் கூர்மையான ஆயுதத்துடன் நின்றிருந்தார்கள். ஓரத்தில் எருமையும், அருகில் பாசகயிறும் அடுத்த ஆன்மா வுக்காக காத்திருந்தது. அருகில் சித்ரகுப்தன் பாவக்கணக்கை எடுத்து வைத்து யமதர்மனுக்காக காத்திருந்தார்.
யமதர்மன் சித்ரகுப்தரை ரிஷியுடன் அனுப்பிவைத்தார். ஒவ்வொரு இடத்திலும் தவறுக்கு உரிய தண்டனை பாரபட்சமற்ற முறையில் அளிக்கப் படும் நிலையில் துல்லியமாக தண்டனையை உணர்த்தியது. தீவிரமான தண்டனைகளையும், கொடுமையான தண்டனைகளையும் அவரவரக்ள் தண்டனைக்கேற்ப முடிவு செய்திருந்தார்கள்.
சிறு எறும்பை நசுக்கினாலும் நரகத்தில் இந்த தண்டனை கிடைக்கும் என்று உணர்ந்திருந்தாலும் எப்படி மனிதர்களால் இவ்வளவு தப்பு செய்ய முடிகிறது என்று ரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த இடத்துக்கு வரும்போது ஒரு பாறாங்கல் ஒன்று அங்கிருந்தது கால் தடுக்கி நின்றவர் இது எதற்காக என்றார் சித்ரகுப்தரிடம்.
இது ஒரு சிறுவனுக்காக தண்டனை. அந்தச் சிறுவன் முனிவர் ஒருவரிடம் வளர்ந்தான். அவரை நாடி வருபவர்களுக்கு அன்புடன் அன்னம் அளித்து மகிழ்வார் முனிவர். இந்தச் சிறுவன் சிறு சிறு கல்லை அந்த உணவில் இட்டு மகிழ்வான். அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மேலும் ரசித்து மீண்டும் மீண்டும் இப்படி செய்துவந்தான். அந்தக் கற்கள் தான் இப்படி வளர்ந்து பெரிய பாறாங்கல்லை உருவாக்கியிருக்கிறது.
அவன் விதி முடிந்து இந்த யமலோகம் வரும்போது இந்தப் பாறையைத் தின்று முடிக்க வேண்டும் அவனுக்கான தண்டனை இதுதான் என்றார். ரிஷிக்கு ஆச்சர்யம் யார் அந்த சிறுவன் என்று மனக்கண்ணில் பார்த்தார்.அவரே தான் அந்த சிறுவன் என்பதை அதிர்ந்து யமதர்மனிடம் சென்றார். யமதர்மனிடம் சென்று இந்தப் பிறப்போடு நான் முக்தி பெற விரும்புகிறேன். அதே நேரம் என் தண்டனையையும் இந்தப் பிறவியில் முடித்து விடுகிறேன். இப்போதே இந்தக் கல்லை கொஞ்சம் கொஞ்சமாக தின்று செரித்து கொள்கிறேன் என்றார்.
யமதர்மனும் அவரது கோரிக்கையை ஏற்றான். அந்தக் கல்லை உடைத்து சிறிது சிறிதாக உண்டு தன்னுடைய தண்டனையைக் கழித்த ரிஷி தான் சிலாதர் என்றழைக்கப்படுகிறார். கல் என்றால் சிலா என்று பொருள். என்ன தவம் செய்தாலும் என்ன புண்ணியம் செய்தாலும் செய்த தீமைக்கு உரிய தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதே இறைவனின் கணக்கு.
மனதாலும் சிறு எறும்புக்கும் தீங்கிழைக்காத வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்வோமே.
newstm
newstm.in