Logo

ஓணம் திருவிழாவின் வரலாறு தெரியுமா?

கேரள மக்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை புராண காலத்தைய தொடர்புடையது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ காரணமாக இருந்த நிகழ்வே இந்த ஓணம் பண்டிகையின் மூல காரணமாக உள்ளது.
 | 

ஓணம் திருவிழாவின் வரலாறு தெரியுமா?

கேரள மக்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடும் ஓணம் பண்டிகை புராண காலத்தைய தொடர்புடையது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ காரணமாக இருந்த நிகழ்வே இந்த ஓணம் பண்டிகையின் மூல காரணமாக உள்ளது.

அதாவது, முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய  உதவி  செய்தது ஒரு எலி. அந்த எலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வாரிசான மகாபலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே, தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி, காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். 

அசுர குலத்தினனாக  இருந்த போதிலும்,  தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்குச் சென்று, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரமான வாமனன்  என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார், தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார்.

இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி, குரு சொன்னதை கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மகாபலி மன்னன் தன் தலைமேல், மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினார்.

அதன்படி அவர் சிரம் மீது கால்வைத்து, வாமனர்  அழுத்த, அவர் பாதாள லோகத்திற்குள் சென்றார். அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என வரம் கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். 

அப்படி தன் மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவும் மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இந்த திருநாளில், கேரள மக்களின் மகிழ்ச்சியை காண வரும் மகாபலி மன்னர் ஆசிர்வாதங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவர் என்பது ஐதீகம்.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP