Logo

தீபாவளி ஸ்பெஷல் - கங்கா ஸ்நானம் ஆச்சா?

தீபாவளி தினத்தன்று புனித கங்கையில் நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது ஐதீகமாகும். ஆனால் இன்றுள்ள சூழலில் எல்லாராலும் புனித கங்கைக்கு சென்று நீராடுவது என்பது இயலாத காரியமாகும். அதனால் தான் தீபாவளி தினத்தன்று எல்லா நீர்நிலைகளிலும் கங்கை ஐக்கியமாவதாக நம்முடைய முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
 | 

தீபாவளி ஸ்பெஷல் -  கங்கா ஸ்நானம் ஆச்சா?

தீபாவளியன்று நம் வீட்டு குழாயில் வரும் தண்ணீரில் கூட கங்கை இருப்பதாக ஐதீகம் என்பதால்,அந்த நீரையும் கங்கையாக நினைத்து நீராடினாலே புனித கங்கையில் குளித்த புனிதமும் புண்ணியமும் கிடைத்துவிடும்.

தீபாவளி தினத்தன்று சாதரண நீரையும் கங்கையாக பாவித்து நாம் நீராடும் போது,எல்லா தோஷங்களும் நீங்கி,நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். எண்ணெயில் திருமகளும்,வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கி நீராடியது போன்ற புனிதப்பயன் கிட்டும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.

அதை முன்னிட்டே தொன்று தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்றும் மற்ற பண்டிகைகளின் போது, கேட்கப் படாத கேள்வியாக தீபாவளி திருநாளில் மட்டுமே, கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்கும் வழக்கம் தொடர்ந்து  கொண்டே உள்ளது.

கங்கையின் பெருமையை சாதாரண மானிடன் அல்ல,உலகை ஆளும் ஈசனின் வாய் மொழியாக இந்த உலகத்தினருக்கு சொல்லப்பட்டுள்ளது.ஒரு தடவை அன்னை விசாலாட்சி சிவபெருமானிடம், “சுவாமி, இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்.

இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது நான் பார்க்க வேண்டும்'' என்றார். அதற்கு விசுவநாதர் "சரிவா'' போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும்.

அதோடு புண்ணியவான்கள் தான் என்னைக்காப்பாற்ற முடியும் என்றும் சொல்லு'' என்றார். கங்கைக்கரையில் வணங்கத் தக்க பழுத்த சுமங்கலியாய் விசாலாட்சி கரையில் நிற்கிறாள்.

ஈசனோ, நரைத்த தலையும்,வி சாலமான விழிகளுமாய், வசீகரமான முகத்துடன், கங்கையில் மூழ்கி எழுகிறார். "என் புருஷனை யாராவது காப்பாற்றுங்கள்'' என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.குளித்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர்.

சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே எனத் தவிக்கின்றனர். "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும். பாவிகள் அவரைத் தொட்டால் சுழலில் சிக்கி மாள்வார்கள்'' என்றாள் பார்வதி.

இதைக் கேட்டதும் பலர் பின் வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள். "நீங்கள் இருவரும் பாவமே செய்த தில்லையா?'' என்று கேட்டாள் அன்னை "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது.

என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை, என்றிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்துக்கு முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு சாகலாம் பாருங்கள்'' என்றான் ஒருவன். இரண்டாமவன், அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது.

அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்'' என்றான்.

இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர். "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?'' என்றார் கங்காதரன்."என்னை மன்னியுங்கள்! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

தினம்,தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை, தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப் புனிதமானவள். ஐயன்,தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்'' என ஒப்புக்கொண்டாள் அன்னை. அத்தகைய  கங்கையை தீபாவளி திருநாளில் அதிகாலை தொழுது நீராடி, நம் பாவங்களை போக்கிக் கொள்வோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP