மனதில் சுமையை சுமக்கலாமா?
சில கதைகளும் தத்துவங்களும் பலமுறை கேட்டிருக்கிறோம். எத்தனை முறை கேட்டாலும் அதன் பொருள் என்னவோ ஒன்றுதான். இப்போது நாம் படிக்கும் கதை கூட நிறைய இடங்களில் படித்துவிட்டோம். ஆனாலும் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை.
வாழ்க்கையில் மனிதனுக்கு ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொரு அனுபவங்கள் உண்டு. அவை நன்மையாகவும் இருக்கலாம். அல்லது தீமை விளைவிக்க கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வந்தால் தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். அதற்கு மனதை இலேசாக்கிகொள்ள வேண்டும். அனைத்தையும் மூளையில் பதிவேற்றிக்கொள்வது போல் மனதை நிரப்பி கொள்ள கூடாது. இது வேண்டாத சுமையை தலையில் ஏற்றியிருப்பதற்கு சமம்.
ஒரு குருவும் சீடனும் ஆற்றங்கரையில் நீராட வந்திருந்தார்கள். அப்போது இளம்பெண் ஒருத்து கரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளை கடந்து செல்ல மனமில்லாமல் குரு அவளிடம் என்னவாயிற்று அம்மா. ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதைக் கேட்ட தும் அவள் மேலும் அழுதாள்.
குருவுக்கு சங்கடமாகிவிட்டது. மீண்டும் அவளை சமாதானம் செய்து காரணத்தைக் கேட்டார். என்னுடைய பிரச்னையைத் தங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதனால் உங்களிடம் சொல்லி எந்த பிரயோஜனமுமில்லை என்று கூறி மீண்டும் அழுதாள். குருவுக்கு கோபம் உண்டாயிற்று. ஏனம்மா என்ன பிரச்னை என்று சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடுமா. ஏதோ எல்லோருக்கும் என்னாலான உத விகளை செய்து வருகிறேன். தன்னுடைய அழுகைக்கு காரணம் என்னவென்று சொன்னால் ஒருவேளை என்னால் இயலுமா என்று பார்க்கத்தான் கேட்டேன். அதிலும் பொது இடத்தில் அமர்ந்து கொண்டு அழுகிறாயே உனக்கு உதவலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீ எதற்கு அழுகிறாய் என்று சொல் என்றார்.
பிரச்னையைப் பற்றி நான் சொன்னால் அதற்கான தீர்வை நிங்கள் நிச்சயம் செய்வீர்களா என்று கேட்டாள் அந்தப்பெண். என்னால் இயலும் என்று இறைவன் விதித்திருந்தால் நிச்சயம் செய்கிறேன் அம்மா என்றார். உடனே அந்தப்பெண் நான் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு செல்ல வேண்டும். ஆனால் ஆற்றுக்குள் இறங்கினால் என் ஆடைகள் அழுக்காகி விடும். நான் இப்போது சுப காரியம் ஒன்றுக்கு செல்ல விரும்புகிறேன். எப்படி என்னால் ஆற்றைக் கடக்க முடியும் அதை நினைத்து தான் அழுது கொண்டிருக்கிறேன் என்றாள்.
இதற்கா இவ்வளவு கவலைப்பட்டாய். நான் தூக்கி கொண்டு போய் அந்தக் கரையில் விட்டுவிடுகிறேன் என்றார் . நிஜமாகவா சொல்கிறீர்கள் என்று கேட்ட அந்தப் பெண் ஓடிவந்து குருவின் தோள்களில் அமர்ந்துகொண்டாள். குருவும் மெதுவாக நீருக்குள் தவழ்ந்து நடந்த படி அந்தப் பெண் சிறிதும் நனையாமல் கொண்டு போய் அக்கரையில் விட்டார். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு குருவின் மேல் இருந்த பக்தி மறையத்தொடங்கியது.
முற்றும் துறந்தவர் என்றுதான் இவரை நாம் குருவாக ஏற்றுக்கொண்டோம். குரு செய்யும் காரியமா இது என்று கோபம் கொண்டான். வழியெங் கும் குருவிடமும் பேசாமலே வந்தான். ஆனால் என்னவாயிற்று என்றார் குரு சீடனிடம். உங்களை நாங்கள் எவ்வளவு உயரத்தில் வைத்திருந் தோம். மனிதர்களை போல் பெண்ணை பார்த்ததும் மாறிவிட்டீர்களே. அவர்கள் எல்லாம் தீண்டக்கூடியவர்களா. ஒரு பெண்ணை தோள்மீது அமர்த்தி நடப்பது குருவுக்கே நன்மையா என்று கேட்டான்.
உனக்கு என்னவாயிற்று மகனே. நான் அப்போதே அந்தப் பெண்ணை கரையில் இறக்கும் போதே அவள் சுமையோடு அதையும் சேர்த்து இறக்கி விட்டேன். நீ இன்னுமா அந்த சுமையை சுமந்துகொண்டிருக்கிறாய் என்றார்.
நாமும் சீடனை போல் தான் வாழ்வில் நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டு அசைபோட்டு அதற்கு தனி இடம் கொடுத்து சிம்மாசனமிட்டு அமரவைத்திருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் மறக்க வேண்டியவை என்பதை விட மனதை விட்டு இறக்கி வைக்க வேண்டியவை என் பதை உணர்ந்துகொள்வதே நல்லது.
newstm.in
newstm.in