பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு. செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த இவர், லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றார். பிரபல இயக்குனர்களான பாலு மகேந்திரா, ஜான் ஆபிரகாம், கே.ஜி.ஜார்ஜ் ஆகியோரின் வகுப்புத் தோழரும், பிரபல ஒளிப்பதிவாளருமான ராமச்சந்திர பாபு நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 72. ஜான் ஆபிரகாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ உட்பட அவரது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராமச்சந்திர பாபு. நிறைய மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ராமச்சந்திர பாபு, தமிழில், அலாவுதீனும் அற்புத விளக்கும், தேவதை, சாவித்ரி, மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு, பாடும் வானம்பாடி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராமச்சந்திர பாபு. இது தவிர, திலீப் ஹீரோவாக நடித்த ‘புரொபஷர் தின்கன்’ என்ற மலையாள படத்தையும் இயக்கினார்.
நடிகர் திலீப், நடிகை பாவனா காருக்குள் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய படம் ஒன்றிற்காக நேற்று கேரளாவில் கோழிக்கோடு அருகே லொகேஷன் பார்க்கச் சென்றிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக ராமச்சந்திரபாபுவை கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு இன்று நடைப்பெற இருக்கிறது. மறைந்த ராமச்சந்திர பாபு, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சகோதரர் ஆவார். ராமச்சந்திரனின் மறைவு குறித்து திரையுலகினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சகோதரரின் மறைவை அடுத்து, மும்பையிலிருந்து ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் கேரளா விரைந்தார்.
newstm.in