வோல்க்ஸ்வாகனுக்கு ரூ.500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்
காற்று மாசுபாடு விதிகளை மீறி அரசை ஏமாற்றும் வகையில் செயல்பட்ட காரணத்திற்காக, பிரபல ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான வோல்க்ஸ்வாகன் மீது தேசிய பசும் தீர்ப்பாயம் 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரபல ஜெர்மன் கார் நிறுவனமான வோல்க்ஸ்வாகன், உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்தியாவில் லட்சக்கணக்கான கார்களை விற்பனை செய்துள்ள இந்த நிறுவனம், சர்வதேச அளவில், காற்று மாசுபாடு விதிகளை மீறியதாக கடந்த சில வருடங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. சோதனைகளின் போது, குறைந்த அளவு மாசுபாடு ஏற்படுத்துமாறு வோல்க்ஸ்வாகன் கார்கள் திருத்தி காண்பிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு அந்நிறுவனத்தின் மீது 18 பில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது. அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்ட்டின் வின்டர்கார்ன், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவிலும், அதேபோல மாசுக்கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வோல்க்ஸ்வாகன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குழு ஆய்வில், அந்நிறுவனம் மீது 171.34 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இது தோராயமான ஒரு தொகை தான் என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு அந்நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள முழு பாதிப்புகள் குறித்து கணக்கிடமுடியாத நிலை உள்ளதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயம், ரூ.500 கோடி அபராதம் விதித்துக்கு தீர்ப்பளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வோல்க்ஸ்வாகன் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in