{"vars":{"id": "106785:4629"}}

காணாமல் போனதாக தேடப்பட்ட சிறுவர்கள் குட்டையில் சடலமாக மீட்பு..!!

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குருராஜா கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோபிசந்த் (13). இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த நகுல் (12) என்பவர் புதுராஜா கண்டிகை அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான கோபிசந்தும், நகுலும் நேற்று மாலை வெளியே சென்றனர்.

வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை பெற்றோர் தேடி வந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் கோபிசந்தும், நகுலும் சடலமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேர்வாய் கண்டிகை தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றின் அருகே அவர்களது உடைகள் கழற்றி வைக்கப்பட்டு இருந்தது.


எனவே நண்பர்கள் இருவரும் கிணற்றில் குதித்து குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது. 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.