ரேஷன் கடையில் உயிரிழந்த இளைஞர்.! பொங்கல் பரிசுகளுடன் ரூ.50 ஆயிரம் மாயம்.. அடிதடி..
தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் அனைகுப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்ற இளைஞர் ஆணைக்குப்பம் ரேஷன் கடையில் பொங்கல் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வாங்குவதற்காக இரண்டு மணி நேரமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க சேலம் கிச்சிப்பாளையம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பொங்கல் பரிசு விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கலில் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அதிமுகவினர் வழங்குவதாகவும், வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்காமல் அதிமுகவினரை கண்டு வழங்குவதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அமமுகவினர் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
newstm.in