1. Home
  2. தமிழ்நாடு

கணவனை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலம்..

கணவனை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலம்..

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கரியமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (52), தச்சு தொழிலாளியான இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், பொன்னி மற்றும் சுபா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பொன்னிக்கு திருமணமாகி கோட்டார் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். சுபா ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு அய்யப்பன் மதுக் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் நள்ளிரவில் அய்யப்பன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

மறுநாள் காலை 7 மணி அளவில் எழுந்த கிருஷ்ணவேனி, அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். அய்யப்பனின் உடலை பார்வையிட்டனர். அப்போது பிணமாக கிடந்த அய்யப்பனின் தலையில் 3 இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அய்யப்பனை யாரோ பயங்கரமாக அடித்துக் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையை தொடாங்கினர். அய்யப்பனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, “என் கணவர் கடந்த சில தினங்களாகவே மது குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும், 11ஆம் தேதியும் சண்டை போட்டுவிட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், நானும், என் மகளும் படுத்து தூங்கி விட்டோம். காலையில் எழுந்து பார்த்த போது தான் அவர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது என கூறியுள்ளார். மேலும் “என் கணவர் கீழே விழுந்து இறந்திருப்பார்“ என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணவேணியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, அய்யப்பனை அவருடைய மனைவியே கல்லால் தாக்கி கொன்றது தெரிய வந்தது. மது குடித்துவிட்டு தகராறு செய்த அய்யப்பன் திடீரென கல்லை எடுத்து வந்து கிருஷ்ணவேணியை தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அய்யப்பனை தள்ளிவிட்டார். எனினும் அவர் விடவில்லை. மீண்டும் கிருஷ்ணவேணியை தாக்க முயற்சி செய்தார்.

எனவே அய்யப்பனிடம் இருந்து கல்லை பிடுங்கிய கிருஷ்ணவேணி, அதே கல்லால் தன் கணவரை தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கம்பாலும் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் போதையில் மயங்கியிருப்பார் என்று நினைத்துக்கொண்டு கிருஷ்ணவேணி தன் மகளுடன் தூங்க சென்றுள்ளார். அதிகாலை 2 மணி அளவில் எழுந்து பார்த்தபோது அய்யப்பன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது அய்யப்பன் இறந்து கிடந்ததால் பதறிப்போன கிருஷ்ணவேணி செய்வதறியாது திகைத்துள்ளார். கொலை செய்தது வெளியே தெரிந்தால் போலீசில் சிக்கி கொள்வோமே என்று பயந்து போன கிருஷ்ணவேணி, தன் கணவர் கீழே விழுந்து இறந்திருப்பார் என்று அழுது புலம்பி நாடகமாடி உள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like