1. Home
  2. தமிழ்நாடு

இன்றைய சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன?

இன்றைய சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன?

புது வருஷத்தின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் முழுவதும் தெரியும் என்றும், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.
இன்று இரவு சரியாக 10.36 மணிக்கு தொடங்கி நாளை மதியம் 2.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 12 ராசிகளின் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? எந்த ராசிகளுக்கு எல்லாம் பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

மேஷம்:
இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணம் உங்கள் இராசியின் 3வது வீட்டில் நிகழ்கிறது. அதனால், உடன்பிறப்புகளுடன் இதுநாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் இப்போது முதல் சரியாக துவங்கிவிடும். சந்திர கிரகணத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விலக, நாளை காலையில் எழுந்து குளிக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைக் கரைத்து விட்டு தலைகு குளித்து விட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு, வெல்லத்தை தானம் செய்து வாருங்கள். மறக்காமல் ஆஞ்சநேயரை தரிசிக்கவும்.


ரிஷபம்:
இன்றைய சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் நிகழ்கிறது. இரண்டாவது வீடு என்பது பணத்தையும், பொருளையும் குறிக்கும். யார் என்ன சொன்னாலும், உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். இந்த கிரகண நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக உங்களது பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் நல்ல பலன்களைப் பெற நாளைக் காலையில் சிவனுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து விட்டு, அருகிலுள்ள சனிஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அந்தணர்களுக்கு வெல்லத்துடன் பாலையும் சேர்த்து தானம் கொடுத்தால் பலன்கள் அதிகரிக்கும்.


மிதுனம்:
இந்த கிரகணம் மிகச் சரியாக உங்களது சொந்த வீட்டிலேயே நிகழ இருக்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக இதய நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். நடைப்பயிற்சியும், தெளிவான மனநிலையும் அவசியம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தாக்கம் இருக்கும்.
கிரகண காலத்திற்குப் பிறகு அருகில் உள்ள பசு மடத்திற்குச் சென்று, பச்சை புற்களையும், கீரை வகைகளையும் பசுவிற்கு கொடுத்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


கடகம்:
இன்றைய கிரகணம் உங்கள் 12ம் வீட்டினுள் நிகழ இருக்கிறது. இந்த கிரகணத்தினால் மிக மோசமான விளைவுகள் கடகத்திற்கு தான் என்றாலும், இதனால் பயப்படத் தேவையில்லை. நீண்ட காலமாக விரிசலில் இருந்த உறவு முற்றிலும் முறிந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நாளை காளை எழுந்ததும், தண்ணீரில் கலந்த பாலுடன் குளித்தால் உங்களுக்கு நல்லதே நடைபெறும். அருகில் உள்ள ஆலயத்திலும் பால் தானம் செய்யுங்கள். கிரகண நேரத்தில் ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.


சிம்மம்:
இந்த கிரகணம் சிம்ம ராசியினருக்கு 11வது வீட்டில் நடக்கப்போகிறது. இதனால், சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களும் நண்பர்களும் சண்டையிட கூடும். வேலைக்காக காத்திருக்கும் சிம்ம ராசியினருக்கு இது யோகமான காலம்.
கிரகணம் முடிந்தவுடன் அடுத்த நாள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று எண்ணெய் தானம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


கன்னி:
இந்த கிரகணம் கன்னி ராசிக்கு 10வது வீட்டில் இருப்பதால் பெரிதாக எந்த விதமான பாதிப்புகளும் கிடையாது. முன்கோபத்தினால் நீங்களாகவே சிக்கலை வரவழைத்துக் கொள்வதைத் தவிர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிக்கு, ராகு கேது தானம் செய்வது மிகவும் நல்லது.


துலாம்:
துலாம் ராசிக்கு இந்த கிரகணம் 9வது வீட்டில் நிகழ போகிறது. இது நல்ல பலன்களையே தரும். வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேகத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.ஆஞ்சநேயரின் வழக்கமான வழிபாடு செய்வது நலம் தரும்.


விருச்சிகம்:
இந்த கிரகணம் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் நடக்கப் போகிறது. நிச்சயமாக தந்தையுடனான உறவை கெடுத்து விடும். ஆஞ்சநேயரின் தரிசனம் நன்றாக இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு, குரங்குகளுக்கு வாழைப்பழத்தை வழங்குவது நல்ல பலன் தரும்.


தனுசு:
உங்கள் ராசியில் 6 கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன. சனி, புதன், சூரியன், குரு என ஒரே இடத்தில் பல கிரகங்கள் அமர்ந்துள்ளன. இந்த கிரகணம் உங்கள் 7வது வீட்டிற்குள் விளைவை ஏற்படுத்தும். திருமண பிரச்சினைகள் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மஞ்சள் தானம் செய்வதும், கிரகண காலத்திற்குப் பிறகு மஞ்சள் தண்ணீரில் குளிப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.


மகரம்:
உங்களுக்கு 6வது வீட்டில் இந்த கிரகணம் நடக்கப் போகிறது. எதிரியின் வீடு இது. எனவே உங்களது எதிரிகள் இனி பின்வாங்குவார்கள். மன்னிப்பு கேட்பார்கள். இதுநாள் வரையில் இழுப்பறியாக இருந்தவைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 41 நாட்கள் தொடர்ந்து ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால், வாழ்க்கை மேலும் ஏற்றமடையும்.


கும்பம்:
இந்த கிரகணம் கும்ப இராசிக்கு 5வது வீட்டில் நடக்கப் போகிறது. இது குழந்தை மற்றும் கல்வியின் வீடு. அதிகமாக யாரிடமும் பேச வேண்டாம். பைரவர் தரிசனம் உங்களுக்கு மிகவும் நல்லது. ஆஞ்சநேயரின் தரிசனமும் மிகவும் நல்லது.


மீனம்:
இந்த கிரகணம் மீன இராசிக்கு மிகவும் நல்லது. மீன இராசிக்கு 4வது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இது சிறப்பானது தான். வேண்டியவைகள் அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். சம்பளம் அதிகரிக்கும். பதவியுயர்வும் உண்டு.
விஷ்ணு சகஸ்ர நாமத்தைச் சொல்வது நல்ல பலன் தரும்.

newstm.in

Trending News

Latest News

You May Like