1. Home
  2. தமிழ்நாடு

கார்த்திகை தீபத்தைக் கொண்டாட சில குறிப்புகள்!

கார்த்திகை தீபத்தைக் கொண்டாட சில குறிப்புகள்!

கார்த்திகை தீபத்தின் சிறப்பே வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் தீபங்களை நிறைய ஏற்றுவது தான். அதனால் தீபத்திற்கு விளக்கேற்றுவதற்காக கடைசி நேரத்திலே அடித்துப் பிடித்து விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் போன வருஷம் பயன்படுத்திய பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், கண்டிப்பாக சாஸ்திரத்திற்காக 6 புதிய அகல் விளக்குகளை மட்டுமாவது வாங்குவது நல்ல பலன்களைத் தரும்.

மண் அகல் விளக்குகளுடன், நம் வீட்டிலுள்ள மற்ற பித்தளை, வெள்ளி, செம்பு விளக்குகளையும் ஏற்றுவதால் நம் வீடு தீப ஒளியில் பிரகாசிக்கும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத் தான் இப்படி தீபங்களை ஏற்றி வழிபாடு செய்கிறோம்.

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் விளக்குகளை போட்டு குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்து விடாமல் இருக்கும். 4 மணி நேரம் ஊறியதும், நன்றாக தேய்த்து கழுவி, மின் விசிறி இருக்கும் இடத்திலோ வெயில் படும் இடத்திலே காய வைத்து எடுக்க வேண்டும்.

பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில், சிறிதளவு சோப்பு தூள் போட்டு ஊற வைக்கவும். இப்படிச் செய்தால், பழைய அகல் விளக்குகளில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு தன்மை முற்றிலுமாக போய் விடும். அதன் பிறகு நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.

காய்த்த மண் அகல் விளக்குகளை எடுத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். விளக்குகளில் இப்படி மஞ்சள் குங்குமம் வைப்பதால் மங்களமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்கலாம். நிறைய விளக்குகளுக்கு பொட்டு வைக்க வேண்டியுள்ளதால் சந்தானம் கரைத்த கிண்ணத்தில் ஒரு பட்ஸ்சும், குங்குமத்தில் ஒரு பட்ஸ்சும் போட்டு வைத்து கொண்டு போட்டு வைக்கலாம். பொட்டு வைப்பதற்கு எளிதாக இருக்கும். குங்குமத்தை தொடுவதற்கு முன்னால் தண்ணீர் தொட்டு அதன் பிறகு குங்குமத்தை எடுத்து வைத்தால், தீபத் திருநாள் முடியும் வரைக்கும் விளக்குகளில் வைக்கும் பொட்டு அழியாமல் இருக்கும். எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

எண்ணெய் ஊற்றிய பின்னர் தான் திரி போட வேண்டும். பஞ்சு திரி மிக மெல்லிதாக இருந்தால் இரு திரியை ஒன்றாக்கி ஒரே திரியாக போடலாம். இருதிரி போட்டு ஏற்றுவதால் வெளியே வைக்கும் விளக்குகள் காற்றில் அணையாமல் இருக்கும். வீட்டிற்குள் ஏற்றும் விளக்குகளுக்கு இரு திரி தேவை இல்லை. ஒரு திரியே போதுமானது.

விளக்கை தரையில் வைக்காமல் ஒரு சிறு தட்டின் மீதோ, வெற்றிலை மீதோ, வாழை இலையை சதுரமாக வெட்டி அதன் மீதோ வைக்கலாம். இப்படி வைத்து விளக்கேற்றுவதால் பார்க்கவும் அழகாக இருக்கும். தரையிலும் எண்ணெய் வடிந்து கரை படியாது.

தீபங்கள் அனைத்தையும் வாசலில் ஏற்றி பிறகு வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வது மகா லக்ஷ்மியை நம் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. மாலை நேரத்தில் வாசல் தெளித்து, அழகான கோலங்கள் போட்டு அதன்மீது விளக்குகளை ஏற்றி வையுங்கள்.

பச்சை அரிசியை முதலிலேயே ஊற வைத்து கோலம் போட வேண்டும். நேரம் இல்லை என்றால் அரிசி மாவு கொண்டு கோலம் போடவும். காவி நிறத்தை கோலத்தை சுற்றி வர்ணம் தீட்டவும். காவி நிறம் சிவசக்தி வடிவமாக கருதப்படுகிறது.

காலையிலேயே தலைவாசல் படிக்கு மேலே மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை தோரணம் விசேஷ நாட்கள் மட்டும் இல்லாமல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கட்டுவது நல்லது. காய்ந்த மாவிலையை கழட்டி விட வேண்டும். மாவிலை தோரணம் கெட்ட சக்திகள் வருவதை தவிர்க்கிறது. திருஷ்டி ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு வளையமாக அமைகிறது.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீபொறிகள் கங்கையில் விழுந்து 6குழந்தையாக , முருகப் பெருமான் தோன்றியதால், சிவபெருமானுக்கு பொரி உருண்டை செய்து நிவேத்தியம் செய்வது விசேஷம். சில வீடுகளில் மாவிளக்கு எடுப்பதும், கொழுக்கட்டையை அகல் விளக்கு போல் செய்து 6தீபமாக ஏற்று வழிபடுவதும் உண்டு.

குத்து விளக்கு பூஜை கார்த்திகை தீபத்தன்று செய்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும். குத்து விளக்கு தண்டு பகுதியில் பூ அல்லது மஞ்சள் கயிறு சாற்றி வழிபடவும்

newstm.in

Trending News

Latest News

You May Like