ஐயப்ப பக்தர் வேடத்தில் திருட்டு-விசாரணையில் அதிர்ந்த காவல்துறையினர்
சென்னையில் ஐயப்ப பக்தர் வேடம் அணிந்து நூதன முறையில் திருடும் போலி பக்தரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே. நகரிலுள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர் ஒருவர் இருமுடிக் கட்டும் போது அவரது குடும்பத்தினர் தங்களது உடைமைகளை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதை பார்த்த திருட்டு பக்தரான செந்தில்குமார், அதிலிருந்த கைப்பை ஒன்றைத் தூக்கி கொண்டு சென்றுவிட்டார். அந்தக் கைப்பையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐ -போன் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைப்பை திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. பின்னர் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கைப்பையில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து செந்தில் குமாரை பின்தொடர்ந்த காவல்துறையினர் நெசப்பக்கம் அருகே ஒரு கடையில் வைத்து அவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணம் மற்றும் தங்க நகைகள் திருடியது, நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் செந்தில்குமார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், தனது 3 வது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் செந்தில்குமார் என்ற தகவலையும் அறிந்து காவல்துறையினர் அதிர்ந்தனர். இதனையடுத்து திருட்டு பக்தரான செந்தில் குமாரை கைது செய்தனர்.
newstm.in