தெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி - நடிகை நயன்தாரா அதிரடி
தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை அம்மாநில போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை என்றும் இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி, இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல் தரும் என்பதோடு அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயம் தரும் எனவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும் என நயன்தாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in