ஃபாத்திமா வழக்கில் மட்டும் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளே, இதை எப்போ கவனிப்பீங்க ???
வாலிபன் ஒருவனை 2 பேர் காதலிக்கிறார்கள். ஒருத்தி பணக்காரி, ஒருத்தி ஏழை. அந்த வாலிபன் தன் நண்பரிடம் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்று கேட்கிறான். அவனோ ஏழைப் பெண் தான் உனக்கும், உன் குடும்பத்திற்கும் ஏற்றவள். உனது சம்பளத்திற்குள் அவள் குடும்பம் நடத்துவாள். பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவரை பாதுகாத்து, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது கஷ்டம். எனவே எந்த யோசனையும் வேண்டாம், ஏழைப் பெண்ணை நீ திருமணம் செய்து கொள், பணக்காரப் பெண் முகவரியை எனக்கு தா என்றானாம். இது அண்ணாதுரையின் கதைகளில் பிரபலமானது.
அவரின் தொண்டர்கள் இன்றைக்கு தமிழக மக்களின் துன்பத்தில் துயரத்தில் பங்கு பெறுவது, முகவரி கேட்ட அந்த நண்பனைப் போல தான் இருக்கிறது. அங்காடிக்கு சென்றாலும் கைராசி வேணும் என்ற பழமொழிக்கு ஏற்ப நம் அரசியல் வாதிகள் நிதி உதவி செய்வதும், ஆறுதல் கூறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அனைத்து அரசியல் கட்சிகளும் சென்றன. நாம் போகாவிட்டால் கூட கட்சித் தொண்டர்கள் போன் செய்து அண்ணே எல்லாரும் வந்துட்டாங்க, நீங்களும் வர வேண்டும் என்று போனில் வற்புறுத்தி அழைக்கிறார்கள் என்று கூறி சீமான் வருந்தியது போல, அரசியல் தலைவர்களுக்கு இது மறைமுக கட்டாயமாகிறது. இதனிடையில், அனிதாவின் சகோதர்கள் இன்ஜினியரிங் படித்திருந்தும் கூட நிதி உதவி குவிந்தது.
இது போன்ற சம்பவங்கள் சில தொடர்ந்து விஷ்வல் நக்சல்கள் பார்வையில் பட, அவை பெரிது படுத்தப்பட்டன.
அதில் சமீபத்திய சம்பவம், சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா லத்திஃப்-ன் தற்கொலை. அவரது செல்போனில் 3 பேராசிரியர் பெயர்களை குறிப்பிட்டு தன்னுடைய தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டு விட்டு அவர் இறக்கிறார். அவரது மரணம் குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டித்து, மற்ற மாணவ, மாணவிகள் இது போல நடந்து கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். நிர்வாகம் அவ்வாறு செய்யத் தவறும்போது மாணவர் அமைப்புகள் அந்த பிரச்சனையை கையில் எடுத்து நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்த வேண்டும்.
இன்று மாணவர்கள் பிரச்சனைகளுக்காக போராடும் டி.ஒய்.எப், ஏ.பி.வி.பி, எஸ்.எப்.ஐ போன்ற இடது சாரி, வலதுசாரி மாணவர் அமைப்பு பல நம் தமிழகத்தில் உள்ளன. இன்னொரு புறம், ஐஐடி மாணவர் என்றாலே தனி மரியாதை, ஏனெனில், அரசு கல்லுாரியில் படிக்கும் கிராமப்புற மாணவி போல இருக்க மாட்டார். அவர் வேற லெவல். நம்ப ஊரில் கவுல்சிலரை பார்க்க கூட பல நாள் அலைய வேண்டியிருக்கும். ஆனால் ஃபாத்திமாவின் தந்தை லத்திஃபோ கேரள முதல்வரை பார்த்து மனுக் கொடுக்கிறார். அவரது பரிந்துறையின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நன்கு வசதியான குடும்பத்தை சேர்ந்த, விவரமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஏதோ கைநாட்டு பேர்வழி தனது ஒரே வாரிசை இழந்து நடுத் தெருவில் நிற்பது போல எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும் பதறி துடிக்கிறார்கள். இவர்கள் பதட்டத்திற்கு இறந்தவர் இஸ்லாமிய பெண், சம்பவம் நடந்த இடம் மத்திய அரசு நிறுவனம் என்பது மட்டும் தான் காரணம்.
ஃபாத்திமா லத்திஃப் 3 பேராசிரியர் மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவர்களில் சுதர்சன் பத்மநாபன் தான் அந்த பெண்ணை அரிவாளால் வெட்டியதைப் போல அனைத்து ஊடகங்களும் போட்டு தாக்குகின்றன. ஆனால் மற்ற 2 பேர் பற்றி முதல்நாள் சொன்னதோடு சரி பிறகு அவர்களின் பெயரே வெளிவரவில்லை.
இந்த சம்பவங்கள் நடந்து சில நாட்களிலேயே வேறு ஒரு மாணவி திருச்சியில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ஃபாத்திமா லத்திஃப் போல அவர் அதிர்ஷ்டம் செய்திருக்கவில்லை.
இந்துக்களை விட, இஸ்லாமியர் மகளின் படிப்பை விட, அவர் மார்க்கத்தை விட்டு அகலாமல் இருக்க வேண்டும் என்பதையே அவசியமாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட இஸ்லாமியர்களில் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யும் கல்லூரி திருச்சி அய்மான் கலைக்கல்லூரி. இங்கு என் மகள் புர்க்கா அணிந்து செல்ல முடியும். 5 வேளை தொழ முடியும் என்ற காரணங்களுக்காகவே அங்கு தங்கள் மகள்களை சேர்கிறார்கள் பெற்றோர்கள்.
அந்த கல்லூரியின் விடுதியில் ஓர் இஸ்லாமிய மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை கூட வெளியிடவில்லை. ஜவாஹிருல்லா, தமின் அன்சாரி, திருமாவாளவன், கம்யூனிஸ்ட்கள் என ஒருவரும் வாய் திறக்க வில்லை. ஊடகங்களும் இது குறித்து பேசவே இல்லை. காவல்துறையும் கூட ஃபாத்திமா லத்திஃப் விவகாரத்திற்கு காட்டிய வீரியத்தை இந்த மாணவியின் வழக்கில் காட்டவில்லை.
நேற்று முன்தினம் (19ம் தேதி) திருச்சி கிறிஸ்தவ பாதிரியார்களை உருவாக்கும் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த பிரசாத் (25) தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அரசியல் கட்சிகள் எப்படி கையாளப் போகிறது என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.
இதுவும் அய்மான் கல்லுாரி மாணவி சம்பவம் போலதான் இருக்கும் என்றால், அரசியல் கட்சிகள் ஃபாத்திமா லத்திஃபிற்கும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை குமுதம் ஸ்டைலில் 6 வித்தியாசமாவது கூற வேண்டும்.
அவர்கள் கூறத்தவறினால், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தகுதி அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்கிறது. அதன் பின்னர் கல்லூரியில் படிப்பதெல்லாம் கிட்டத்தட்ட இலவசம் தான். இங்கு படிப்பவர்கள் மிகச்சிறந்த அறிவு கொண்டவர்கள். அவரின் பெற்றோர்கள் ஒரு சிலரைத் தவிர அனைவருமே வசதிபடைத்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் வாரிசுகளின் கல்விக்காக அதி தீவிர நடவடிக்கையை கூட எடுப்பார்கள்.
இதனால் ஐஐடி போன்ற நிறுவனங்களை ஒழித்து கட்டிவிட்டால், தனியார் நிறுவனங்கள் தான் கல்வியில் கடைவிரிக்கும். அவர்களுக்காத்தான் ஃபாத்திமா லத்திஃப் போன்றவர்களின் தற்கொலை சம்பவங்கள் பெரிது படுத்தப்படுகின்றன என்ற வலதுசாரிகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். அப்போது அரசியல் வாதிகளுக்கு படித்தவன் சூது செய்தால் ஐயோ என்பதைப் போல தான் தண்டனை கிடைக்கும்.
Newstm.in
newstm.in