கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி? - 8
கமல்ஹாசன் சைவ வெறுப்பாளர் அல்ல. ஆனால், நல்ல வைணவர். ஹேராம் படத்தில், நான் சைவம் அல்ல. But vegetarian. நான் வைணவன் என்றே வெளிப்படையாகச் சொல்வார். (மும்பை ஏர்போர்டில் இறங்கியதும்) அவர் வைணவரா, சைவரா என்பதில் நமக்கென்ன கவலை? அவர் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிப்பவர். அவ்வளவு தான்.
விருமாண்டி படத்தில், அந்த நாயகன் அந்த கிராமத்தின் அடாவடி ஆசாமி. அவனை நாத்திகனாகக் காட்ட, பெரிய வாய்ப்புள்ள பாத்திரம்; செய்யவில்லை. சிறையில் இருக்கும் போதும், கம்யூனிச / பெரியாரிய கொள்கைகளைப் பேச வைக்க மிகப் பெரிய வாய்ப்பிருந்தும் அதையெல்லாம் கவனமாகத் தவிர்த்திருப்பார்.
ஒரு விசயம் யோசித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். கமல்ஹாசன் படம் அளவிற்கு வேறு எந்த நடிகரோ, இயக்குநரோ தம் படங்களில், தெய்வ விசயங்களை கலந்து செய்திருக்கிறார்களா? நிஜ வாழ்க்கையில் நாத்திகம் பேசுவது போல் நடிக்கும் கமல்ஹாசன், நடிக்கும் போதும், தான் இயக்கும் போதும், ஆத்திகத்தையும்/ ஒழுக்கத்தையும் உயர்த்திப் பிடித்திருப்பார்.
அடிப்படையில், அவரின் எல்லா படங்களிலும் மதம் / ஜாதிக் கட்டுப்பாடான குடும்பப் பின்னணியுடன் தான் இருக்கும். ( தேவர்மகன் – சிவாஜி ; மகாநதி – பூர்ணம் விஸ்வநாதன் ; நம்மவர் – நாகேஷ் ; பம்மல் கே.எஸ் – முதலியார் குடும்பம் ; வேட்டையாடு விளையாடு மற்றும் உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் கூட, கிடைச்ச கேப்ல குடும்ப பந்தத்தைச் சொருகியிருப்பார்.. கிட்டத்தட்ட எல்லா படத்திலும் இதே நிலை தான்)
அன்பே சிவம் படத்தில், ஒரு கிருத்துவப் பெண்மணியை உயர்த்திக் காட்டியதற்காக வருத்தப்படும் ஹிந்துக்கள் கவனிக்கத் தவறிய விசயம், விஸ்வரூபம் படத்தில், அமெரிக்காவில் அமைதியான வாழ்க்கை வாழும் பாத்திரத்திற்கு ஒரு கிருத்துவராக நடித்திருக்கலாம். அத்தனை சிறப்பான வாய்ப்பு கிடைத்தும், தன்னை ஒரு வைணவன் கதாபாத்திரத்தில் புகுத்திக் கொண்டவர். ஏன்? விஸ்வரூபம் படத்தில் மிகவும் கொடூரமான போர்க்களத்தில் இருந்த ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டு வாழும் போது, அதற்கு முற்றிலும் முரணான குணாதிசயத்துடன் காட்ட வேண்டும். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வைணவ வாழ்க்கையை. அமைதியான வாழ்க்கைக்கு, இந்து மதம் தான் சரி என்று தீவிரமாக நம்பியவர் தான், இன்று ஹிந்துத் தீவிரவாதிகள் என்று திடீர் போராளியாகிவிட்டார்.
நம்ம ஆழ்வார்களின் பாசுரங்களில், மிகச் சிறப்பாகப் போற்றப்படும் நாயிகா பாவம் (நாயகி பாவம்) எனும் முறையை, கமல்ஹாசன் அளவிற்கு வேறு யாரேனும் கையாண்டிருக்கிறார்களா?
ஆழ்வார்கள் பாசுரத்தை உணர்ந்து ரசித்து நெகிழத் தெரிந்த யாராக இருப்பினும், விஸ்வரூபம் படத்தில் வரும் பாடலான, உனைக் காணாமல் நான் இங்கு நானில்லையே என்ற பாடலைக் கேட்கும் போது தொண்டை அடைத்து, கண் கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அத்தனை ஆழமான பக்திப் பாடல்.
நாயகி பாவம் என்பது, தன்னைப் பெண்ணாகவும் கடவுளைத் தன் நாயகனாகவும் பாவித்து தன்னை ஆட்கொள்ள அழைப்பதாக அமைவது(ம்). இந்தப் பாடலில், விரகத்திலிருக்கும் ஒரு பெண், தன் மீது பெரும் காதலுடன் தன்னைச் சந்திக்க வரும் காதலன் தன்னிடம் எப்படி நடந்து கொள்வான்? அதற்கு தான் எப்படி எதிர்வினையாற்றுவேன் என்று நினைத்து உருகுவது.. கம்சன் (ஆணையிட்டு கண்ணனை அழைக்கச் செல்லும் போது அக்ரூவரின் மனநிலை)
எல்லாருக்கும் பாடல் வரிகள் தெரியும் என்பதால் அதன் ஆழ அகலங்கள் பார்க்காமல் கடப்போம். ஆனால், நீங்கள் பாடலை இப்பொழுது ஒரு முறை அவசியம் கேட்டே ஆகவேண்டும். ஆழ்வார்கள் நாயகி பாவத்தில் எழுதியிருந்தாலும், ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகர் நாயகி பாவத்தில் கொண்டாடிய அதே பரணை (சந்த விருத்தம்) இந்தப் பாடலிலும் கொண்டு வந்திருப்பார். இந்த வீடியோவைப் பாருங்கள்.. ( ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம்)
இப்ப அந்தப் பாடலில்,
“அதிநவநீதா அபிநயராஜா...கோகுலபாலா கோடிப்ரகாஸா...
விரகநரக ஸ்ரீரட்சக மாலா...எத்தனைமுறை நான்ஏங்கி சாவேன்
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடியவா களவாடிய சிந்தைக்கு திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா? பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர் தம் மாயா நீ வா…” என்ற வரியைக் கவனியுங்கள்.
எத்தனை நுணுக்கமாக, ஆழ்வார்களையும் வேதாந்த தேசிகரையும் இக்கால இசையில் குழைத்து, அதே ரசத்தை வடித்துக் கொடுத்திருக்கிறார் பாருங்கள். ஒரு நாத்திக புத்தியில் வரக் கூடிய சிந்தனையா இது?
அதை விட, அந்த வரிகளில் தன் விரகம் போக்க, தன்னை பூதனையாகக் கூட ஆக்கிக் கொள் என்பது, விரக தாபத்தின் உச்சம்.
அதாவது, பூதனையின் மார்பினை உறிஞ்சியே அவளைக் கொன்றவன் ஆயர்களின் மாயன் அப்படியாவது என்னை ஆட்கொண்டு விட இரைஞ்சுகிறார். அதுதான் அர்த்தமா என்று சந்தேகிப்பவர்கள், அந்த வரி வரும்போது, கமல்ஹாசன் எப்படி அபிநயம் காட்டுகிறார் என்று கவனித்து விட்டுச் சொல்லுங்கள்.
விருமாண்டி படத்தில் கோர்ட்டில் ஒரு பெண் ஜன்னல் வழியே விருமாண்டியைப் பார்த்து சொல்வாள்… "கிணத்துக்குள்ள இருந்த வரை நல்லவனா இருந்தேல… உன்ன கிணத்த விட்டு வெளிய அனுப்புனது தப்பு தப்பு…"
2015 வரை நல்லவனா தானே இருந்தீங்க கமல்ஹாசன்….? அப்புறம் என்ன ஆச்சுனு மக்களிடம் சொல்வோமா?
newstm.in