இருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் ??
தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, திமுக ஆகிய 4 கட்சிகளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கடந்தவை. மற்ற எல்லா கட்சிகளையும் இவற்றில் அடக்கவிட முடியும். அனைத்து கட்சிகளின் கொள்கைகளுமே இந்த 4 கட்சிகளுக்குள் அடங்கும்.
சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியிலேயே அவர்கள் உதவியுடன் சுப்பராயலு, முனுசாமி நாயுடு, பனகல்ராஜா, ராமகிருஷ்ண ரங்காராவ், பிடி ராஜன், கூர்மா வெங்கடரெட்டி என்று நீதிக்கட்சி தலைவர்கள் ஆட்சி செய்தனர். இதில் சென்னை மாகாணம் அன்று இருந்த நிலையில் இப்போதுள்ள தமிழகத்தில் இருந்தவர்களை விட அருகில் உள்ள மாநிலங்களில் இருப்பவர்கள் தான் முதல்வராக இருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த காலகட்டத்தில் தமிழகம் அன்றாட தேவைகளையே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.
கல்யாண மண்டபத்தின் வாசலில் பூசிய சந்தனம் சில மணித்துளிகள் மணப்பது போல சுதந்திர போராட்டத்தின் தாக்கம் மறையாத காலகட்டத்தில் காமராஜர் ஆட்சி அமைந்தது. அவர் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் திமுக ஆட்சியை பிடித்தது, அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி கடைசியாக ஆட்சி செய்தவரை, பிச்சைக்காரர் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நலத்திட்டத்திடங்களை அறிமுகம் செய்தனர் .
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சத்துணவு தொடங்கி, லேப்டாப் வரை பல சமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளனர்.
இதுவரையில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கு என்று ஏதோ ஒரு கொள்கை இருக்கிறது. எம்.ஜி.ஆரை சிரமப்படுத்திய ஒரு கேள்வி அதிமுகவின் கொள்கை என்ன என்பதுதான். அதற்கு அவர் அண்ணாயிசம் என்றார். இப்படி ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்தி அதில் தட்டுத் தடுமாறி நடைபோடுகிறது.
இன்றைக்கு திமுக, அதிமுக இல்லாவிட்டால் கூட மதிமுக, நாம் தமிழர், இடது சாரி கட்சிகள், பாமக என்று பட்டியலிடும் வகையில் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் முன் வைக்கும் அனைத்து கொள்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்த வில்லை. இவர்கள் அனைவரின் கொள்கையும் தோல்வி அடைந்த பின்னர், தமிழகத்தில் வெற்றி இடம் ஏற்படும். அப்போது அரசியலைத் தாண்டி வெளியில் இருந்து ஆட்களை தேடினால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் பல பத்து ஆண்டுகளுக்கு பின்னால் திரைத்துறையை விட்டு அரசியல் வெளியே வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திமுகவை சரி செய்து அதனை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்றால், ஓட்டு அரசியலைத் தாண்டி பல சமுக பிரச்னைகளை எடுத்து மதிமுக களத்தில் இறங்கி போராடியிருக்கிறது. உதாரணமாக சீமைக் கருவேல மரத்தை வெட்டுவதால் மதிமுக எத்தனை ஆயிரம் ஓட்டுக்களை பெறப் போகிறதோ.
சரி அவர்கள் வேண்டாம் என்றால் அமெரிக்காவை போல தமிழகத்திலும் நிழல்பட்ஜெட் வெளியிட்டு மாநிலத்தின் நலனைப் பற்றி கூறும் பாமகவை தேர்வு செய்யலாம். இது போல இடது சாரிகள் உள்ளனர். இவர்களில் யாரையாவது தான் ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும்.
அதை விடுத்து விஷ்வல் நக்சல்கள் தமிழகம் அதிமுக, திமுகவை விட்டு வெளியேறி விடக் கூடாது என்று பாதுகாக்கின்றன.
திமுக, அதிமுக வேண்டாம் என்பவர்கள் அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது போலவும், மீண்டும் இருட்டுக்குள் தலைவர்களை தேடத் தொடங்கியும் உள்ளனர்.
சினிமாத் துறையில் வெற்றிகரமாக இருப்பவர்கள், தமிழகத்தை முன்னேற்றுவார்கள் என்பது அறிவீலித்தனம். இவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. முன்னர் மிகப் பெரிய வெற்றிடம் இருந்த காலத்தில் விஜயகாந்த் அரசியலில் நுழைந்து தனித்து போராடிய போதும் ஒரு இடம் தான் கிடைத்தது.
இந்த அபாயம் தற்போது தனித்தோ, சேர்ந்தோ திரைத்துறையில் இருந்து தொபுக்கடீர் என்று குதித்தவர்கள் ஒரு இடம் பெறக் கூடிய அபாயமும் உள்ளது.
நேர்மை, தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய ஆர்வம் மட்டும் ஆட்சி அமைக்கும் தகுதியை தந்து விடாது. இடது சாரிகள் கூட 25 கோடி ரூபாய் வாங்கும் நிலைக்கு அரசியல் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் திரையில் இருந்து எழுந்து வந்து ஆட்சி அமைத்து, தமிழகத்தை மாற்ற முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமியே ஆட்சியை நடத்தி விட்டார். மற்றவர்களால் முடியாதா என்ற எண்ணம் இது போன்ற விபரீத யோசனைகள் எழ வழி வகுக்கின்றன. இதற்காக இருட்டுக்குள் முதல்வர்களை தேடினால் இன்னொரு 50 ஆண்டுகாலம் தமிழகத்தின் தலைவிதியை மாற்ற எவராலும் முடியாது.
Newstm.in
newstm.in